Wednesday 6 June 2012

புலம்பெயர் நாட்டினிலே…

மெய்மறக்க வைக்கும்
ஆலயச்சூழலும்
கொள்ளைகொள்ளும்
பச்சைவயல்வெளியும்…

மரங்களடர்ந்த
ஒற்றையடிப்பாதையும்
உடலை வருடும்
தென்றற்காற்றும்…

குளக்கட்டருகே
ஒற்றைக்கால்
தவமிருக்கும்
வெண்கொக்குகளின்
கண்கவரழகும்….

இரவினிலே இனிதாக
மணங்கமழ்த்தும்
மல்லிக்கொடியழகும்..
வேப்பமரக்கீழ்க்கட்டிலிலே
ஓய்வின் சுகமும்…

நிலவிரவில்
நண்பர்களுடனான
உணர்வுப்பகிரல்களும்..
தொலைத்துவிட்டு
யாருக்காய் இவ்
இயந்திரவாழ்க்கை…
புலம்பெயர் நாட்டினிலே…

ஏங்குகின்றேன்
என்னுயிர் விளைந்த
மண்ணின் வாசனைக்காய்...
திரும்பக் கிடைக்குமோ
அப்பொற்க்காலம்...

--------கீர்த்தனா-----------

No comments:

Post a Comment