Saturday 24 October 2015

விதி

 









நிர்மலம் குலைந்த
சிந்தனை வானில்
கரும்பூத முகில்களின்
கொடுங்கோலாட்சி!

வீதிதோறும் அரசமரங்கள்!
போதிமரமாகும் பேறு
அவற்றுக்கும் இல்லை!

விதி அறிந்து
நிர்வாணம் பெறும் பேறு
சபிக்கப்பட்டவர்களுக்கும் இல்லை

Saturday 12 September 2015

இனிய உள்ளம்




அந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வேளையில் அங்கு சென்று விடுவேன்.. அகலும்போதும் அகன்ற பின்னும் எத்தனை வண்ணங்கள் வானில்...அதன் பிரதிபலிப்பு ஏரியில்...இரசிப்பதற்கு இரு கண்கள் போதாது. கரையோரப் படகுகளும், நாணற் புற்களும், நானும் மட்டும் அங்கிருப்போம். சில சமயம் புகைப்படங்களும் எடுப்பேன்.

அந்த ஏரிக்கரை தனியாருக்கு சொந்தமான பகுதியில் அமைந்திருந்தது. ஒருநாள் சென்ற போது பெரிய இரும்புக்கம்பியால் பாதை அடைக்கப் பட்டிருந்தது. ஒரு நோர்வேஜியப் பெண்மணி அருகில் இருந்தார். அவரிடம் அங்கு போக முடியாதா என்று கேட்டபோது, மன்னிக்க வேண்டும் இருபது வருடங்களின் பின் மூடியிருக்கிறோம். அங்கே இரவில் வருபவர்கள் குப்பைகளைக் கொட்டி சத்தமெழுப்பி எங்களை வெறுப்பேற்றுகிறார்கள். இனிமேல் எப்பவுமே பாதை திறக்க மாட்டோம் என்றார்.
அந்த சமயம் மனதில் தோன்றிய சொல்லொணா வேதனை வார்த்தையில் விவரிக்க முடியாது. அன்னையைப் பிரிந்தது போல் நெஞ்சை அடைத்தது. சிலருடைய வேண்டாத செயல்களால் சிலருடைய மகிழ்வு பறிபோகிறதே என்று அவர்கள் மீது மிகவும் வெறுப்பு தோன்றியது. என் தோழியிடம் அதைச் சொல்லி சொல்லி வருந்துவேன்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எனது மருத்துவரிடம் சென்று கொண்டு இருக்கும் போது மனதில் நினைத்துக் கொண்டு போகிறேன் சிலவேளை மனம் மாறி பாதை திறந்திருப்பார்கள், திரும்பி வரும் போது போய் ஒரு தடவை பார்த்து வர வேண்டுமென்று. மருத்துவர் கிட்ட போய் வந்தாலும் நம்ம கை சும்மா இருக்காதில்ல. மழை வந்ததால் இலைகளில் நீர்த்துளிகள் அப்பிடியே படம் பிடித்துக் கொண்டிருந்தேன்... யாரோ மன்னிக்கவும் என்றபடி தோளில் தொட்டார்கள். திரும்பிப் பார்த்தால் ஆச்சரியம். அந்தப் பெண்மணி. அவர் சொன்னார் எனது மருமகன் நீங்கள் இயற்கையை மிகவும் இரசிப்பீர்கள் என்றும் அடிக்கடி அங்கு வருவீர்கள் என்றும் சொன்னார். இயற்கையுடன் உறவாடுபவர்கள் மென்மையானவர்கள் அவர்கள் மனதை வருத்தக் கூடாது. அதனால் உங்களை மட்டும் அங்கு வர அனுமதிக்கலாம் என்று குடும்பத்தில் முடிவு செய்திருக்கிறோம். இனிமேல் வழமை போல அங்கு வாருங்கள் என்று.

சொல்ல வார்த்தையில்லை...அம்மாவிடம் போகப் போகும் உணர்வு. ஏரிக்கரைக்கும் எனக்குமான உறவு யாருக்கும் சொல்லில் புரிய வைக்க முடியாது. அவருக்கு இதயபூர்வமான நன்றி பலதடவை சொன்னேன். அதெல்லாம் ஒன்றுமில்லை எனப் புன்னகைத்தபடி விடை பெற்றுச் சென்றார். மனிதமும் இனியவர்களும் இன்னும் இங்கிருப்பதற்கு இன்னொரு சான்று இந்த நிகழ்வு.

Friday 11 September 2015

மகாகவி

மகாகவியின் இன்றைய நினைவு நாளில் அவர் தம்  பாடல்கள் இசையுடன் கேட்போம்.

https://www.youtube.com/watch?v=bjsM64B6wAU&list=PLD1E4D6E3AAA7DBC6

Friday 4 September 2015

ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

















தாமரைச் செண்டுகள்
சுற்றும் கரு வண்டுகள்
ஒற்றைக்காற் பிடிவாதம்
கற்றை ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

ஒரு கணம் மலர்ந்து
மறு கணம் இறந்து
மறுபடி பிறந்து
திரும்பவும் மலர்ந்து
மாசற்ற தாமரை நெஞ்சம்
கற்றை ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

---கீர்த்தனா--- 

Wednesday 2 September 2015

மழை இதம்!















தாழ்வாரம் சலசலத்து ஓடுகிறது
ஆழ் அமைதி மனதில்...
மழைக்கும் எனக்குமான உறவு
விளக்கிச் சொல்ல முடியா உணர்வு...
நாளை முளைக்கும் குழப்பங்களை
நாளை பிடுங்கி எறியலாம்...
இன்று மழை இதம்!
இந்த நிமிடம் நிஜம்!

Friday 28 August 2015

மதுநிலாவுடன் ஒரு உலா...

மதுநிலா தன் தோளை மிஞ்சி வளர்ந்த குழந்தைக்கு வாஞ்சையுடன் உணவூட்டிக் கொண்டு இருந்தாள். அவள் மனக்காயங்களும் உடல்வலியும் வெகுவாகப் பாதித்து மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தாள். அமைதி பெற மனம் துடித்தபடி இருந்தது . விழிகளுக்குள் ஊடுருவி அகம் படித்த பிள்ளை, அவளது புகைப்படக் கருவியையும் கொண்டு வந்து கொடுத்து, அம்மா கொஞ்சம் வெளியே சென்று வாருங்கள் என்று கைபிடித்து எழ வைத்தான்.
 
தனது சிறிய மின்வாகனத்தில் மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்தாள் மதுநிலா. ஒரு வீட்டு வேலியால் எட்டிப் பார்த்த தங்கநிற சூரியகாந்திப்பூ அவளைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தது. தன்னிச்சையாக மலர்ந்த புன்னகையுடன் அதை நிழற்படமாகச் சிறைப்பிடித்தபின் பயணத்தைத் தொடர்ந்தாள்.

பொன்னிறத்தில் முற்றிக் கதிர் சாய்த்த பரந்த வயல்வெளிகள் கடந்து சென்று கொண்டிருக்கையில் «இயற்கை நிலையம்» எனும் அறிவித்தற் பலகையுடன் ஒற்றையடிப்பாதை ஒன்றைக் கண்டாள். ஆர்வம் உந்தித் தள்ள அதனூடே செல்ல ஆரம்பித்தாள். சிறிது தூரம் ஓங்கியுயர்ந்த மரங்களூடே பயணித்தபின் பாதை இருமருங்கிலும் ஆளுயரம் தாண்டி வளர்ந்திருந்த நாணற்புற்பற்றைகள் காற்றுடன் உரசி சலசலத்தபடி  அவளை வரவேற்றன. அவற்றுக்கு அழகு சேர்ப்பது போல் சின்னஞ்சிறு குருவிகள் அவற்றை ஊஞ்சலாக்கி ஆடியபடி பாட்டுப் பாடின. அந்தரத்தில் வெண்முகிற்குவியல்கள் அங்கு வரச்சொல்லி ஆசை காட்டுவது போல் மிதந்தன. நீர்ப்பறவைகள் சிலவற்றுக்கு அவ்வளவு ஆனந்தம் போலும், இறக்கைகளை அடிக்காமலே விரித்தபடி வானில் நீந்தின. அனைத்தும் ஒன்றிணைந்து ரம்மியத்தை வாரி வழங்கிட அவள் மனமும் இறுக்கம் தளர்ந்து இயற்கையோடு இயல்பாக ஒன்றத் தொடங்கியது. அந்தஇயற்கை நிலையத்தை அடைந்ததும் பலகைத் தடுப்பு வேலியைக் கடந்து பார்வையை சுற்றும் வீசினாள். மதுநிலாவுக்கு மிகவும் பிடித்த சொர்க்கம் அங்கே படைக்கப் பட்டிருந்தது.

குன்றுகள், சிறியமலைகள், நீர்நிலை ஆங்காங்கே அதனுள்ளே பெரிய பாறாங்கற்கள், நீர்நிலைக்கு நடுவே நீண்டு நெடிதுயர்ந்த மரங்களுடன் மேடாக சிறிய நிலப்பரப்பு, ஒரு ஓரத்தில் பரந்து விரிந்திருந்த பச்சைப்புல்வெளி, அதில் மேய்ந்தபடி வெண்பசுக்கள் (முழுப் பசுக்களும், கன்றுகளும் வெண்மை நிறமாயிருந்தன) ஆயிரக்கணக்கில் விதவிதமான நீர்ப்பறவைகள் குவிந்து போயிருந்தன. அவற்றின் மொழிகள் எங்கும் மோதித் தெறித்தன. பூமியை வண்ணங்களில் குளிப்பாட்டுவதற்கு ஆயத்தம் செய்வதற்காகக் கதிரவன் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். தூரத்தில் மேற்குத் திசையில் பறவைகளை இருந்து ரசிப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த பரண் போன்ற மரக்குடிலொன்று மிகவும் அழகாகக் காட்சி அளித்தது.

  அது நாடுவிட்டு நாடு வந்து பறவைகள் தங்குமிடம். நமக்கும் இறக்கைகள் இருந்திருக்கக் கூடாதா என்று ஒரு கணம் அவள் மனம் ஏங்கியது. உறவுகள் தொலைத்த புலம்பெயர் வாழ்வில் அன்புறவுகளை நோக்கிப் பறந்து சென்று வரலாமில்லையா... பெருமூச்செறிந்தபடி அங்கே போட்டிருந்த மரபெஞ்சில் ஏறி கால்களை இருக்கையில் வைத்து உட்கார்ந்தாள். கைகளைப் பின்னே ஊன்றி ஆசுவாசமாக இரசிக்க ஆரம்பித்தாள்.

எரிக்காமல் மென்சூட்டுடன் தழுவிய மாலை வெயில். முகத்தில் மோதிய மெல்லிய தென்றல் அவளின் தலைக்குளித்த விரித்த கூந்தலை பட்டும்படாமல் மென்மையாய்த் தடவி அலையவிட்டது. ஆஹா ஒருவித விவரிக்க முடியாத பரவச நிலை. சுழித்த உதடுகளில் புன்னகை கீற்றாய் நெளிந்தது. அட நாம் இயற்கையை ரசிப்பது போல் இயற்கையும் நம்மை ரசிக்கிறதாக்கும் என்ற எண்ணம் மேலும் அவளிடம் புன்னகையை மலர வைத்தது. நொந்த உள்ளத்தை வருடிப் புன்னகைக்க வைக்க இயற்கையை மிஞ்சி என்ன மருந்துள்ளது எனும் எண்ணம் மனதில் ஓடியது. சிறிது நேர ஏகாந்த இனிமையை விழுங்கிவிட்டு எழுந்தது நெஞ்சை உலுக்கும் ஒரு குருவிக் குஞ்சின் அவலக்குரல்.

அவள் மின்வாகனத்தில் போய் அமர்ந்து கொண்டாள். மெல்ல மெல்ல விடாது கத்தியபடி குருவிக்குஞ்சு அவளை நெருங்கியது. இப்போது காலடியில் நின்றவாறு அவள் முகத்தைப் பார்த்துப் பார்த்துக் கத்திக்கொண்டே இருந்தது. உணவு கேட்டுக் கத்துவது போலவே தோன்றியது. பசியில் களைத்த தன் குழந்தையைப் பார்த்த தாயின் பதற்றம் மதுநிலாவின் வயிற்றில் நெஞ்சில் பிசைந்து பரவியது. பரபரப்புடன் முதுகில் காவும் பையை கொட்டி ஆராய்ந்தாள். எதுவுமே இல்லை. மின்வாகனத்தில் சிறியபெட்டி ஒன்று பொருட்கள் கொண்டு செல்வதற்காகப் பொருத்தப்பட்டிருந்தது. அதனுள்ளே தான் வழமையாக பறவைகளுக்குக் கொடுப்பதற்கு ரொட்டித்துண்டுகள் தானியங்கள் எடுத்துச் செல்வாள் மதுநிலா. அன்றைக்கிருந்த மனநிலையில் எதுவுமே எடுக்காமல் கிளம்பி இருந்தாள். குருவிக்குஞ்சு இடைவிடாது முகம் நோக்கி அழுது கொண்டே உணவு கேட்டது. அவள் கண்கள் தன்னிச்சையாக நீரை வெளியேற்றின. «என்ன செய்வேன்» «என்ன செய்வேன்» என அரற்றியபடி அந்தப்பெட்டியை ஆராய்ந்தாள். கடவுளே அங்கேயும் ஒரு காய்ந்த துகள் கூட இல்லை. தண்ணீர்ப் பாட்டிலும் இல்லை. கீழே குனிந்து சாரி சாரி என்றபடி கண்ணீருடன் அதன் இறக்கைகளைத் தடவினாள். பலநிமிடங்கள் ஓயாமற் கத்திய பின் அது இவளிடம் எதுவும் கிடைக்காது என முடிவெடுத்தது போலும். மெல்ல மெல்லத் தத்தலும் பறத்தலுமாய் அங்கிருந்து அகன்றது.

மதுநிலாவின் நெஞ்சம் சொல்லொணா வேதனையை பாரமாகச் சுமந்துகொண்டது. விழியோரம் துளிர்த்தபடியே இருந்தது. குற்றஉணர்வு உள்ளத்தைப் பிசைந்தது. அன்னையென நம்பி வந்து அணைந்த சின்னஞ்சிறு ஜீவனுக்கு பசியாற்றும் நிலை கிட்டாத பாவியானதை ஜீரணிக்க முடியாமற் தவித்தாள். எதையுமே அவளால் இரசிக்க முடியவில்லை. எதுவும் இனிமையாகத் தோன்றவில்லை. பெஞ்சில் ஏறி இருள் கவிந்தது கூட உறைக்காமல் அசைவற்று எங்கோ வெறித்தபடி  வீற்றிருந்தாள். வெள்ளைக்கார மனிதர் ஒருவர் வந்து நலம் கேட்டுக் கவனத்தை ஈர்த்தபின், வீடு நோக்கிய பயணத்தில்...கனத்த உணர்வுகளுடன் கனத்த இருளில் கலந்தாள். வலிகள் சுமப்பதே அவள் வரம் போலும்.

ஓயாத அதன் அழுகுரலும் முகத்தை நோக்கிப் பார்த்த அதன் பார்வையும் உள்ளே ஆழமாய்ப் பதிந்து போயின. நாளை உணவெடுத்து மீண்டும் அங்கு அவள் வருவாள், ஆனால் அந்தக்குஞ்சு அவளிடம் இனி வருமா? (வந்து காத்திருந்தாள் அது வரவே இல்லை) இனி வாழும் காலம் வரை மதுநிலா இதை நினைத்து வருந்துவாள்... ஒவ்வொருதடவையும் ரொட்டித் துண்டு எப்போதும் வெளிச்செல்கையில் அவள் கைப்பையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.
(ஒருநாளில் ஒரு சிற்றுயிருக்காவது பசியாற்றும் ஆனந்தமும் மனநிறைவும் எல்லாருக்கும் கிடைக்கட்டும். எப்போதும் நம்மால் முடிந்ததை கையில் எடுத்துச்செல்வோம்...)
---கீர்த்தனா---(கீதா ரவி)

குட்டிகதை போல ஒன்று. எண்ணங்களின்  வெளிப்பாடுகள் கிறுக்கல்களாக பதிந்திருக்கிறேன். குறைநிறை இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். 

Wednesday 26 August 2015

மீண்டும் பிறந்து வாருங்கள்...



இற்றைக்கும் அன்னை மாதேவியின் 
வெற்றிடம் நிரம்பவில்லை!

நொந்தவரைத் தாலாட்ட
பொன் நெஞ்சின் தூளியில்லை!

கருணைப் பூவின் இதழ் விரிக்கும்
கரும்புச்சாறுச் சிரிப்புமில்லை!

கரம் விரித்து அள்ளிக்கொள்ளும்
அரவணைப்பும் இங்கு இல்லை!

வாழ்தலுக்கு அர்த்தம் கொடுக்கும்
மானிடர் தரணியிலே பஞ்சம்!

உலகத்துப் பிள்ளைகள் யாவரும்
உன் மடிப் பிள்ளைகள் தாயே...

வரம் கேட்டுத் தவம் செய்கிறோம்
மீண்டும் பிறந்து வாருங்கள் அன்னையே!

---கீர்த்தனா---

Monday 24 August 2015

துக்கமற்ற தூக்கம்

துக்கமற்ற தூக்கம்
சிலசமயம் வாய்க்கும்!
நெஞ்சக்கடல் அடங்கும்
அமைதி அலை வீசும்!
நல்ல காலம் பிறக்கும்
இந்த நிமிடம் நிஜமே!
நிலவைத் தொட எத்தனிக்கும்
இராப் பட்சிகளுடன்
ஆனந்தமாய் இணைகிறேன்!
இனி ஒரு கனாக்காலம்!
வரும் ஒரு நிலாக்காலம்!


---இனியகீர்த்தனா---

முடிவிலியாய் தொடர்ந்தபடி...

முடிச்சவிழ்க்க முயற்சிக்கும்
மனமும் ஓர் நாள் ஓய்ந்து போகும்!
மனங்களைப் படிக்கும் கலையில்
தேர்ச்சி பெறாத மாணவர்களே அதிகமாய்...

இன்று சிநேகமாய் சிரித்தவர்கள்
நாளை சிரிக்காமல் கடந்து செல்வார்கள்
எதனால் என்பதை அறியாமலே
உள்ளே தும்புச் சிக்கல்களால்
ஒரு குழப்பக் கூடு உருவாகும்...

அறிந்தோ அறியாமலோ
எவரையாவது சிலுவையில் ஏற்றி விட்டு
பாவிகளாகிறோம்...
விடையறியா மனக் கிணற்றின்
ஆழங்கள் இன்னும் ஆழங்களாகவே...

வலி மிகுதியுடன் யாரோ ஒருவர்
யாரோ ஒருவரால் என்பதன் தொடர்ச்சி
முடிவிலியாய் தொடர்ந்தபடி...
 
 ---கீர்த்தனா---

Sunday 23 August 2015

எதுவும் நம் கையில் இல்லை...

நகர்வுகள் எதுவும்
நம் கையில் இல்லை...
அகண்ட பேரண்டத்தில்
பல்லாயிரம் கோடி
அசையும் அணுப்புள்ளிகள்
அதில் நாம் ஒற்றைப்புள்ளி...


ஒற்றைப்புள்ளிக்குள்
பலகோடி பலகோடி
கற்றை உணர்வுகள்
சற்றும் இரக்கமின்றி
புதைத்து வைத்தானே...
அவன் கருணை கொண்டவனா...
இல்லை கடுமை உள்ளவனா...

இல்லையென்று சொல்வதில்லையாம்
கையேந்தினால்....
இல்லையென்றே சொல்கிறான்
என்றுமே...பெரும்பாலும் பலருக்கு ...

---கீர்த்தனா---

உற்றுக் கவனியுங்கள்

வாள் முனைக்கு
முன்னாலே
சந்தோசங்களை
ஏன் நீட்டுகின்றோம்!
சின்ன சின்னப் பூக்களை
உற்றுக் கவனியுங்கள்
அவற்றுள் எத்தனை அற்புதமாய்
வரையப்பட்டிருக்கின்றன
குட்டி குட்டி ஓவியங்கள்!


---கீர்த்தனா---

Wednesday 19 August 2015

புன்னகைப்பது நீ தானே

எரித்துக் கொல்லும் அன்பின்
தாகத்தை அணைக்க
ஏரிப்படுகைக் கரையில்
மணிக்கணக்காய்
ஒற்றைத் தவம் நாள்தோறும்...

கரை எங்கிலும்
ரோஸ் வண்ணத்தில்
ஏதோ காட்டுப்பூக்கள்
குவிந்து போய்
காற்றில் சிலிர்த்து சிரித்தன...
கண்ணீரில் கரைந்த கன்னங்களை
உன் கரங்கள் துடைக்கும் வரை
ஜீவமரணப் போராட்டம் உள்ளே
நிகழ்ந்த படியே...


ஓட்டையாய் போன
ஒற்றைப் படகொன்று
நீர் நிரம்பிப் போய்
தேடுவாரற்று கரை ஒதுங்கிக் கிடந்தது...
ஒற்றைப் பறவை ஒன்றின்
கூப்பாடு விட்டு விட்டு ஒலித்தது... 


தென்றல் மட்டும் இதமாய்
தலை கோதிக் கொடுத்தது...
அந்த பூக்காடுகளிடையே
நின்று புன்னகைப்பது நீ தானே
தென்றலாய் தலை கோதியதும் நீதானே...



 ---கீர்த்தனா---

Monday 17 August 2015

என் ஏகாந்த நகரம்!

வேதனை வெப்பங்களை
சூரியக்கங்குகள் விழுங்கி
வீரியத்துடன் அமைதி தரும்
அடிவான நகருள் புதைந்து பின்
விடிவானில் எழுந்து வருவேன் நிதம்!

இயற்கைத் தாய் தந்த
என் ஏகாந்த நகரம்!
அத்தனை முறையும்
நேசக்கதிர்கள் நீட்டும்
அடிவான வண்ணக்குழம்பு!
அழகிய மௌனத் தொடர்பாடல்
நீரில் நீந்தி வானில் கலக்கும்
ஆசீர்வதிக்கப்பட்ட
ஆனந்த மணித்துளிகள்!
இயற்கையை ஆளப் பிறந்த
பேரரசி நான்!
---கீர்த்தனா--- Mobile click

Akersvannet, Melsomvik, Norway ( அடிக்கடி சூரிய அஸ்தமனத்தில் போய் அமரும் இயற்கை மடி)

Thursday 19 March 2015

பேறு பெற்றோர்...

சாத்தான்கள் நடனமாடும்
தூக்கம் மறுக்கும் இரவுகளில்...

கற்பனைப் பூதங்கள்
விண் தொட வளரும்...

இனம்புரியாப் பயப்பந்துகள்
நெஞ்சுக்குள் உருளும்...

அமைதியின்மை
ஆட்டிப் படைக்கும்...

விழியோரச் சிறுதுளிகள்
தலையணை அணைக்கும்...

தூக்கம் வரப் பெற்றோர்
பேறு பெற்றோர்...

---கீர்த்தனா---

Tuesday 6 January 2015

மின்னுகின்ற வைரநிலா!

அன்பென்னும் தேன் பொழிய
அண்டமெல்லாம் அதில் குளிர
பொன்னிறத்து வைக்கோல் மேல்
மின்னுகின்ற வைரநிலா
பாலகனே நீர் உதித்தீர்
பாவமெல்லாம் கரைத்து விடும்!

செபம் சொல்லி செபம் சொல்லி
ஆண்டவனைத் துதித்த பின்னும்
பாவ மூட்டை சேர்க்கின்றோம்...
பாவியர்கள் உலகமெலாம் ...

மனிதம் எங்கே சென்றதுவோ...
மனங்கள் எல்லாம் வருத்துகின்றோர்
குணங்கள் மாற்ற வாரீரோ
குறைகள் எல்லாம் தீர்ப்பீரோ...

நொந்து போன ஆட்டுக்குட்டிகளின்
சிலுவை பாரம் ஏற்பீரோ...
வெந்து போன மனங்கள் தனை
மன்னவரே காப்பீரோ...

விண்ணகத்து வண்ண நிலா
மண்ணகத்தில் மலர்ந்தீரே!
எண்ணமெலாம் அறிந்து நீரும்
வண்ணமய அகிலமொன்றை
சாந்த விழிப் பார்வையினால்
அன்புமயம் ஆக்கிடுவீர்...

---கீர்த்தனா---

சனி பகவான்...

அடுத்தடுத்து ஆயிரம் பிரச்சனை
விடுத்துக்கடக்க முடியவில்லை...
ஏழரைச்சனி பிடித்தாட்டுதாக்கும்
விரதம் பிடியென அம்மா சொன்னார்...

பிறந்தநாள் முதலாய்
என்மேற் காதல் கொண்டானோ
அன்புச் சனி பகவான்...

இத்தனை ஆண்டுகள்
சளைக்காமல் பின்னாலேயே
சுற்றிக் கொண்டே வருகிறானே...

பலதடவை உச்சத்தில் நின்று
உச்சபட்சக் காதல்...
உயிர்நின்று மூச்சுமுட்டி
மீண்டு வந்து மீண்டு வந்து...

விட்டுவிடு தலைவா...
முக்கால் கடந்துவிட்டேன்
காலையாவது
நிம்மதியாய் வாழ்ந்து போகிறேன்...

கீர்த்தனா