Wednesday 25 December 2013

வையகத்தின் பேரொளியே!!!

வைக்கோலின் அணைப்பில்
வையகத்தின் பேரொளியே!!!

மெய் கொண்ட வேதனைகளும்
பொய் ஆனோரின் பாவங்களும்
வாஞ்சையுடன் சுமக்கப் பிறந்தவரே!!

மறு கன்னத்துடன் அறைந்த கன்னத்தையும்
மறுபடி காட்டும் பொறுமையும், அன்பும்
உம்மிடம் வேண்டுகின்றோம்...

மன்னிப்பெனும் வார்த்தையின்
மாண்புக்கு சாட்சியானவரே
மறந்து விட்டோர் நெஞ்சங்களில்
மன்னிப்பை கற்றுத் தருவீர்...

இறை தூதா! இயேசு பாலா!
அன்பெனும் பெருமழை
அனைவர் உள்ளங்களையும் குளிர்விக்க
ஆனந்தமாய் பிறந்தீரே....

இனி நிலைத்திடுமே மனிதம்
ஒளிர்ந்திடுமே இவ்வையகம்...

---கீர்த்தனா---

Saturday 21 December 2013

எண்ணிய முடிதல் வேண்டும்...

வெறும் கோஷங்களுக்காகவோ...
அன்றேல் தன் புகழுக்காகவோ...
புனையவில்லை அவன் கவிதை!!

அவன் சொல்லெனும் வண்ணமும்
செயலெனும் திண்ணமும்
ஒன்றாக்கி வாழ்ந்திட்ட அமரகவி!!!

சுவாசமாய் கொள்கைகள்
சுத்தமாய் சுவீகரித்து...
உணர்ந்த உணர்வுகளை
வார்த்தைச் சிலம்புகளாய்
உருக்கி வார்த்து...
புரட்சியின் வேட்கையை
அக்கினித் துண்டங்களாக்கி...
அனலாய் விதைத்தவன் பாரதி
அடக்கப்பட்டோர் அகத்தில் பார் அத்தீ...

அவன் ஆன்மாவின் இராகங்கள்
மெய் ஆக்கல் வேண்டும்- அவை
மெய் ஆக்கிய பின்பே
அவன் புகழ் பேசவும், பாடவும்
அவனியில் எமக்கருகதை தோன்றும்!!
வாரீர்!! வாரீர்!! அவன் பணி தொடர்வோம்!!!

--- கீர்த்தனா---

Friday 20 December 2013

மூங்கில் குழற் காற்றாய்...

 பெரு மரத்தையும்
அடியோடு பெயர்க்கும்
அதே காற்றுத்தான்
மூங்கில் துளைகளின் வழியே
நுழைந்து குழைந்து
இன்னிசை நாதத்தை
மழலைக் குழந்தைகளாக
பிரசவித்துச் செல்கிறது!!!

ஊதும் அழகிய உதட்டுத்தாயின்
கர்ப்பத்தின் வழியே பிறந்து
நடனமாடும் விரல்களின்
ஆனந்தத் தழுவலில்
மூங்கில் துளைகளில்
புகுந்து தவழ்ந்து வரும்
இசைத் தென்றல் ஆகிடவே
இனிய இப் பிறப்பெடுத்தேன்!!!

---கீர்த்தனா---

Wednesday 11 December 2013

அக்கினிக் கவிஞா...


அக்கினிக் கவிஞா!
அன்னைத்தமிழின் குழந்தாய்!!
ஆசுகவித் தலைவா!
இயற்கையின் காதலா!
கண்ணம்மாவைக் கொஞ்சிய
பாசமிகு தந்தையே!!!
கனவுகள் விதைத்தாய்
நிஜமாய்க் கொதித்தாய்!!
முத்தான புரட்சி வரிகளில் 
வித்தாக முளைக்கட்டும்
கொள்கைகளின் செயல் வடிவம்
இன்று முதல் இக்கணம் முதல்
உன்னை உண்மையாய்  போற்றும்
உன்னன்பு  தாசர்களிடம்...
---கீர்த்தனா---

Thursday 21 November 2013

வெள்ளி நிலா...

வெள்ளி நிலா வானிலே
முளைத்த கணங்களெல்லாம்
தனக்காகவே முளைத்ததாய்
மகிழ்ந்து குதூகலித்தது
அறியாச் சிறு குழந்தை!!
குழந்தை குதூகலிக்கட்டும்!!!
வெள்ளிநிலா நாள் தோறும்
வெண்முகம் காட்டட்டும்!!!

---கீர்த்தனா---

Tuesday 12 November 2013

என்னுயிர் அடங்குமோ...


எதனாலோ அடிக்கடி
நினைவில் எழும்
என் வீட்டின் கிணற்றுக்கட்டும்
தொட்டி நிறையத் தண்ணீரும்...
அருகினில் முதுகு தேய்க்கும்
ஓங்கி உயர்ந்த தென்னைமரமும்...

வயிறு சாய்த்த கர்ப்பிணியாய்
குலைகளின் பாரத்தில் வாழைமரங்களும்...
 

அதிகாலை மஞ்சள் வெயில் ரசித்து
பட்சிகளுடன் பேசியபடி
பல்லுத் தேய்க்கும் இனிய கணங்களும்...
புதிதாக இதழ் விரித்த பூக்களுடன்
புன்னகை என்னிதழ் விரிக்க
பேசிய மௌன மொழிகளும்...
 

துள்ளி ஓடும் கன்றுக்குட்டியின்
விடிகாலை விளையாட்டழகும்...
மூங்கில்குழலில் அவித்த வெள்ளைப்பிட்டும்
பச்சை மிளகாய்த் தேங்காய்ச் சம்பலும்
வீட்டுப்படியில் அமர்ந்து
மாமரத்துப் பச்சைக்கிளிகளை
ரசித்தபடி உண்டதும்...

நான்கு சுவர்களுக்குள்
காலைக் கடன்கள் கழிக்கும் போது
புலப்பெயர்வுக்கு வருந்தாமல்
ஒரு நாளும் விடிந்ததில்லை...
 

இடித்தழிக்கப்பட்டு இருந்த இடத்தின்
எச்சமே இல்லாமல் போன
என் வீட்டின் மரணத்தை
இன்னமும் ஜீரணிக்க முடியாத
கணங்களும் இறக்கவில்லை...
எங்கே என் கிராமம்????
இங்கே என்னுயிர் அடங்குமோ
நான் முத்தமிட்டு பிறந்து தவழ்ந்த
செம்மண்ணைத் தொடாமலே???

---கீர்த்தனா---

Sunday 3 November 2013

தாமரையின் தனிச்சிறப்பு!

நீருயர நீருயர
மூழ்காமல்
தலைதூக்கும்
தாமரையின்
தனிச்சிறப்பு!
மூழ்கடிக்கும்
துன்பக் குளத்தில்
வாழ்விழக்கா
வைராக்கியத்தின்
இயற்கைச் சான்று!

---கீர்த்தனா---

நரகாசுர வதம் போதவில்லை


ஏற்றத் தாழ்வில்லா
வாழ்விற்காய்
ஏழ்மையை வதம்
செய்ய வேண்டும்!

பண்டிகை கொண்டாட
நரகாசுர வதம் மட்டும்
போதவில்லை
காத்தற் கடவுளே!

ஏழ்மையின் பெருமூச்சில்
அணைந்து போகும்
தீபங்கள் ஒளி பெறும் நாளே
தீபாவளிப் பண்டிகை நாள்!

---கீர்த்தனா---

Thursday 31 October 2013

சந்திர கிரகணங்களாகும் சந்தோசங்கள்!

சந்திர கிரகணங்களாகும்
சந்தோசங்கள்!
சந்திரனைச் சர்ப்பம்
விழுங்குவதாய்
சொல்லித் தந்தாள் அம்மா!
சர்ப்பமாகி நம் சந்தோசங்களை
நாமே ஏன் விழுங்குகின்றோம்
பல சமயங்களில்...

---கீதா ரவி (கீர்த்தனா)---

Tuesday 29 October 2013

நிலா முற்றம் இடிந்தது!



அன்று ஒரு அழகிய நிலாக்காலம்!
இன்முகம் மட்டும் நட்பின் மடியில்!

ஒருவர் துன்பம் ஒருவர் சுமந்து..
ஒருவர் இன்பத்தில் அனைவரும் மகிழ்ந்து!

வரவில்லை எனின் பதைத்து துடித்து!
வந்து விட்டால் பாசத்தில் அணைத்து!

அழகாய் கூடும் நிலா முற்றம் ஒன்று
சங்கம் வளர்த்து ஒன்று கூடி..
நகைச்சுவை பேசி வாய்விட்டு சிரித்து
எழுத்தினில் அவரவர் உணர்வுகள் கொட்டி
கருத்தொருமித்து வாழ்ந்த காலம்
கண்பட்டதோ?? கனவானதோ???

நிலா முற்றம் இடிந்தது!
நிம்மதி தொலைந்தது!
நேசங்கள் பாசங்கள்
இடம் மாறிச் சென்றன!
உள்ளத்தின் குமுறல்கள்
ஊமைக் காயங்களாய்...
காயங்கள் வலித்தாலும்
மயிலிறகாய் வருடும்
அன்புடன் வாழ்ந்த இனிய நினைவுகள்!


--- கீர்த்தனா---

சுட்டு விரல்களுக்குள் அடங்கின..

ஆனந்த விளையாட்டுக்கள் - இன்று
அடங்கின சுட்டு விரல்களுக்குள்...
துள்ளித் திரிந்த சிட்டுக்கள் - இன்று
அள்ளித் தெளித்தனர் சினத்தை!!!
முல்லைச் சிரிப்பை மறந்து
இருக்கை விட்டு எழ மறுத்து...
கொள்ளை கொள்ளையாய்
சிற்றுண்டி கொறித்தபடி....
கொட்டக் கொட்ட திரையை
உற்றுப் பார்த்தபடி...
விரல்கள் மட்டும் ஓயாமல்
விவரமாய் நர்த்தனமாடியபடி...

--- கீர்த்தனா---

இடிந்து போன மனவீட்டில்...

எதிர்மறை எண்ணங்களின்
சுத்திகரிப்பு ஆலை ஒன்று
இடிந்து போன மனவீட்டில்
இக்கணமே நிறுவ வேண்டும்!!


--- கீர்த்தனா---

சிறப்பு !!


சுழரும் பூமிக்குள்
தமிழின் அழகிய
ழகரமாய் நட்பின்
அழகுச் சிறப்பு !!

குழலின் நாதமும்
யாழின் இசையும்
இழைவதொப்ப
மௌன மொழியின்
மோனச்சிறப்பு!!

விழியின் மூடிய
கதவுகளுக்குள்
குழையும் அன்பின்
ஏகாந்த ராகங்களில்
வழியும் உன்னத
ஆற்றுப் படுத்தல்கள்!!!

--- கீர்த்தனா---

பூவான நெஞ்சங்களுக்கு...

புலர்காலைப் பொழுதினிலே
புன்னகைக்கும் பூக்களெல்லாம்
பூவான நெஞ்சங்களுக்கு
இயற்கை அன்னையின் சமர்ப்பணமாம்!!!

குப்பைக் காகிதமாய்...

வானவில் வளைத்து
வண்ணங்கள் குழைத்து
தூரிகைக் கனவினை
உயிர் ஓவியமாய்
வடித்து வைத்தேன்!!!
சூழ்ந்து கொண்ட
கடும் இருளில்
நிறம் இழந்து..வெறும்
குப்பைக் காகிதமாய்
வண்ண ஓவியம்!!!

---கீர்த்தனா---

பூக்களின் விருப்பம்...

சடசடத்துக் கொட்டும்
மழைத்துளிக்கு
தெரிவதில்லை
பூவுக்கு வலிக்குமென்று!!

தூறலின் மென்மையில்
இதமான நனைதலே
பூக்களின் விருப்பமாய்!!!

---கீர்த்தனா---

உயிர்ப்பயணம்!!


எங்கோ தவறுகள்
மட்டுமே புரிதல்களாக!!!
எங்கும் சாந்தி வேண்டி
பொங்கும் சமாதானம் வேண்டி
வெண்புறாவைத் தேடி
எந்தன் உயிர்ப்பயணம்!!
எல்லா உள்ளங்களுக்கும்
சாந்தியும் நிம்மதியும்
நிரந்தரமாய் உண்டாகட்டும்!!!
உருகும் மெழுகுவர்த்தி
ஒளி தரும் என்றும்...
தன்னுயிர் தந்து!!!!

--- கீர்த்தனா---

Thursday 26 September 2013

நடைப்பிணங்கள்...

புன்னகை பூக்கும்
புண்பட்ட நடைப்பிணங்கள்
பூமிக்கு பாரமாய்...

பூவுக்குள் ஒளிந்திருக்கும்
முகாரி இராக கீதங்கள்
யார் காதுக்கும் கேட்காமலே..
அடங்கும் உயிரின் ஒலி...

--- கீர்த்தனா---

திலீப தீபம்

வயிற்றில் வளர்த்த வேள்வித்தீயில்
உயிர் கரைந்த நிமிடங்களை
யுகங்களாய் எண்ணியபடி
காத்து விட மாட்டார்களா என்று
அன்று நாம் கதறித் துடித்த நாட்கள்...

உடலை விட்டு மூச்சு பிரிந்த கணம்
ஒருமித்த மக்கள் வெள்ளத்தின்
ஓவென்ற கதறல் ஒலியின்
வலியின் பிழிதல்
பச்சை ரணமாய் இன்னும் வலித்தபடி...

மனிதம் உள்ளவரை...
அகிம்சை என்ற சொற்பதம்
இவ்வையகத்தில் வாழும்வரை...
இனியவனே நீ என்றும் சிரஞ்சீவி!
என்றோ ஒரு நாள்
உன் கனவு மெய்ப்படும்!
உன் மனதின் பசி அடங்கும்!
அதுவரை நிம்மதியாய் உறங்கு!


தெய்வீகம்...!

காற்றில் கரைகின்ற
கற்பூர ஜோதி
கரைந்து அழிந்தாலும்...
விட்டுச் செல்லும்
அதன் வாசனை
என்றும் தெய்வீகம்...!

--- கீர்த்தனா---

தனி மனித மாற்றம்

ஓயாத அலைகளாய்
நெஞ்சத்தின் கதறல்கள்!
சமூக மாற்றம் அது
தனி மனித மாற்றம்
என்பதை அறிந்தும்!
இலகுவான போதனைகள்
பிறருக்கு மட்டுமாய்...

நெஞ்சத்துப் பேரலையை
சிறிது தணிப்போராய்...
சொல்வதை செய்யும்
பாரதியின் தாசர் சிலர்!
பெய்யும் வான்மழை
அவர்க்காய்...
இன்னும் மனிதம்
கொஞ்சம் வாழ்வதால்...

---கீர்த்தனா---

பேரன்பின் உயிர்ப்பாய்....

நித்தம் நித்தம்
பூஜைக்கு பூக்கள்
கூட மலராமல் போகலாம்!

உயிரில் கலந்த அன்புக்காய்
விழியோரம் கண்ணீர்ப்பூக்கள்
நாள் தவறாமல் அழகாய்ப் பூக்கும்!

ஒவ்வொரு துளியும்
பேரன்பின் உயிர்ப்பாய்...
யாரும் அறியா
நெஞ்சக் கோவிலில்
நாளும் சமர்ப்பணமாய்...

---கீர்த்தனா---

கண்ணீரின் மொழி...

கண்ணீருக்குள்
ஒளிந்திருக்கும்
ஏதேதோ கதைகள்...
பன்னீர் அபிசேகம் 
எதற்கென அறியாத 
ஆண்டவன் போல்...
கண்ணீரின் 
மொழியறியா
மனிதர்களாய் 
நம்மில் பலர்.....

---கீர்த்தனா---

கருணைக் கடலே!!

கருணைக் கடலே!!
அறியாப் புதிரே!!
உணர்வுக் கடலாய்
எனையேன் படைத்தாய்?

இனிமை தந்தனை
இயற்கை வடிவினில்!
வலிகள் தந்தனை
அன்பின் வடிவினில்!

சுகிக்க நினைத்தால்
சுடுகின்ற வலிகள்..
இயற்கையின் அழகினை
எரித்துக் கொன்றன!!

மாறாத பேரன்பு
வெல்லும் என்று...
மனதோடு மழைக்காலம்
குளிர்விக்கும் என்று...
பச்சையம் நிறைந்த
பசுமை மனதுக்காய்...
உன் கழல் தொழுதேன்
அரவணைத்து அருள்வாய்!!

---கீர்த்தனா---

வாராதிருப்பாயோ...

வாராதிருப்பாயோ
கோபம் கொண்ட
வான் முகிலே!!

மழையில் குளிக்க
பூக்கள் எல்லாம்
வான் நோக்கிப்
பார்த்தபடி....!!

---கீர்த்தனா---

வீணைகளின் புழுதி தட்டி...


நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு - இன்று
நம்பினோர் எழுவதில்லை
வீழ்வதுவே தீர்ப்பு!

தர்மங்களும் நியாயங்களும்
பாழுங்கிணற்றின் வயிற்றுக்குள்
முழுமாதக் கர்ப்பிணியாய்
பெருத்து உப்பிய படி...

விதி விலக்காய் சிலர் தவிர்த்து
வீதி தோறும் மனிதம் செத்தோர்!!
நல்ல மனம் தேடித் தேடி
நாடெல்லாம் ஓடி ஓடி!!!

எழுச்சி கொள்ளத் தெரியாத
வீழ்ச்சி கொண்ட மனிதர்களாய்
பாரதியும் இன்றிருந்தால்
வீணைகளின் புழுதி தட்டி...
நல்லதோர் வீணையாக
ஒவ்வொன்றாய் மாற்றி இன்று
நல்லுலகம் படைத்திருப்பான்!!!

---கீர்த்தனா---

நெஞ்சத்து ஆசைகள்!












அந்திவானத்து வெட்கச் சிவப்பு!
அழகுப் பூக்களின் வண்ண அணிவகுப்பு!
ஆசையாய் கொஞ்சும் பட்சிகள் காதல்!
ஆனந்த கானத்தின் உயிர்ப்புத் தழுவல்!

ஆண்டவன் சன்னதி மங்கள வாத்தியம்!
ஆரண்யம் நடுவே மூங்கில் குடில்!
ஆடிக் களிக்கும் தோகை மயில்கள்!
துள்ளித் திரியும் மருள்விழி மான்கள்!

நுரைத்துச் சுழித்தோடும் அழகு நீரோடை!
ஓங்கி உயர்ந்து பொங்கும் கடலலை!
அழியா அன்பின் அழகிய இராகம்!
இந்தக் கணத்தின் நெஞ்சத்து ஆசைகள்!

---கீர்த்தனா---

முட்களின் அணிவகுப்பு !!


பயணங்கள் 

முடிவதில்லை!
பாதைகள் 

தெரியவில்லை!
பாதம் தொடும்

இடமெலாம்
முட்களின் 
அணிவகுப்பு !!


---கீர்த்தனா---

இவள்...

இவள் இயற்கையன்னையின்
கைக்குழந்தை!!!!
வண்ணங்களும் உணர்ந்தவள் - உரு
இல்லா வலிகளும் உணர்ந்தவள்!!
இலக்கணம் நன்கு அறியாது
இயல்பாய் கிறுக்கி விட்டு - தமிழ்த்
தாயின் மடியில் புரள்பவள்!!!

---கீர்த்தனா---

வினாக்குறிகள்....


விடுகதை வாழ்வுக்கு
விடை தேடும் மனதுக்கு
தொடர்கதையாய்
வினாக்குறிகள் மட்டுமே
மிச்சமாய் !!



---கீர்த்தனா---

வெண்மையின் உண்மை!!

அறியாமல் செய்யும் தவறு!
அன்போடு மன்னிக்கும் தாய்மை!
கண்ணீரும் மாலையாகி
தேம்பும் குழந்தையின்
கலங்கிய கண்களுக்குள்
வெண்மையின் உண்மை!!


---கீர்த்தனா---

திருக்குறளே தேசிய நூல்

வாழ்வியற் தத்துவங்கள்
அத்தனையும் மொத்தமாய்!
இருவரிகள் வடிவினில்
இரத்தினச் சுருக்கமாய்!
தந்தனன் ஐயனும்
குறள் வடிவினிலே!
நற்றவம் செய்தோம் நாம்
திரு வரிகள் உணர்ந்திடவே!

முப்பாலும் கலந்து தந்து
எப்பாலோரும் உணர வைத்து
அறனுடன் சேர்த்து
அனைத்தும் வலியுறுத்தும்...
ஆண்டகை வாக்குகள்
நாட்டினை ஆளும்!!
உயிர்களைக் கவரும்
உலகினை வெல்லும்!!

தெள்ளு தமிழினிலே
அள்ளிக் கொடுத்த வரி...
அறிஞர் மனம் கவர்ந்து,
திரை கடலும் கடந்து,
உலமெலாம் பரந்து...
உயரிய சிறப்பதனால்
மேன்மைதனைப் பெற்ற
அருந்தவ நூல் தனை
தேசிய நூல் ஆக்கிடவே
யோசித்தல் தகுமா???
யாசித்தல் முறையா???

அன்புடைமை பெருக்கி
பண்புடைமை வளர்க்கும்!
வாழ்வியலின் வேதம்
வானோங்க ஒலிக்கும்!
வள்ளுவப் பெருந்தகை வாக்கு
வாழ்வை நேராக்கும் நோக்கு!
திருக்குறளே தேசிய நூல்!
வேறு இல்லை அதற்கு நேர்!!
ஓங்கி உரைத்திடு நீ
தங்கத் தமிழ் ஊன்றும் வேர்!!

---கீர்த்தனா---

இறக்கை விரி...மேலே பற....

மனமொடுங்கிய குருவி ஒன்று
மரக்கிளையின் ஓரத்திலே...
தனியாக அமர்ந்திருந்து
வியந்து வியந்து பார்த்ததங்கு...
துணிவுகொண்ட குருவிகளின்
திறமைகள் அனைத்தையுமே...
பறக்கும் திறன் அறியாது...

ரௌத்திரக்குருவி ஒன்று
ரௌத்திரம் ஓரம் வைத்து
மெதுவாக நட்புக் கொண்டு
அன்பு கொண்டு மனதை வென்று...

மகிழ்வாக்குவேன் தோழிக்குருவி
புது உலகம் காட்டுவேன் என்று...
இறக்கை நுனி பிடித்திழுத்து
வான் வெளியில் எறிந்ததன்று...
இறக்கை விரி...மேலே மேலே பற என்று!!!

---கீர்த்தனா---

Tuesday 20 August 2013

காற்று சுமந்து வரும்...

தூரங்கள் தூரமாய்...
காற்று சுமந்து வரும்
உயிர் மூச்சு...
பிரபஞ்சத்தின்
அத்தனை மலர்களின்
வாசத்தையும்
ஒன்றாய்
அன்பின் வடிவில்
சுவாசத்தில் கலந்து
நறுமணம் வீச வைக்கும்...
வாழ்வின் கடைநிலை
வாழ்தல் வரை...

---கீர்த்தனா---

இரு நிலவுகள்!!

வெண்ணையாய் திரண்ட கன்னம்
வெண்மையாய் மின்ன மின்ன!!
அண்ணாந்து பார்த்தான் என் மகன்
அண்ட வெளியை நோக்கி...
சின்னஞ்சிறு மலர்க்கை தூக்கி
மேலே சுட்டிக் காட்டி!!

அண்ணாந்து பார்த்தேன் நானுமங்கே
வெண்ணை திரண்டு பந்தாய் உருண்டு
வெண்ணிலவு ஒளிவீசித்
தண்மையாய் ஊர்ந்தது!!
கண்களை நிரப்பின இரண்டு நிலவுகள்!!
ரசித்தேன் ரசித்தேன் சுற்றும் மறந்து...
என் தளிர் நிலவவனையும்
வெண் குளிர் 
நிலவினையும்!!!

---கீர்த்தனா---

தூங்கா அதிசயமாய்,,,

தூங்கும் விழிகளுக்குள்
தூங்கா அதிசயமாய்
தூளி கட்டி ஆடும்
நினைவுக் குழந்தைகள்...

---கீர்த்தனா---

Friday 16 August 2013

எச்சில் நீரும் தேன் சுவையாகும்...

எச்சில் நீரும்
தேன் சுவையாகும்
சின்ன இதழ் கடை
சிரிப்பினில் வழிந்து
சொட்டும் துளிகள்
நம்மிதழ் தொடுகையில்...

திக்கும் மழலை
"அம்மா" சொல்கையில்
சொக்கும் பரவசம்
பூ மெத்தை விரிக்கும்...
நட்சத்திரங்கள்
கண்களில் ஜொலிக்கும்...

---கீர்த்தனா---

இழப்பு

எம் சுவாசம் தந்தவள்
தன் சுவாசம் இழக்கையில்...
யாவும் இழந்த நம் யாக்கை
வெறும் கூடாக!
உணர்வுகளின் தடங்கள்
சுடும் தீயாக!
அன்னை மடிக்காய் ஏங்கிப்
பொங்கிய கண்ணீர் ஆறாக
வேதனையின் பிழிதல் சாறாய்
உருகி உருகி நெஞ்சம்
உதிரம் கொட்டியபடி!

இழப்பு அது தன்னுயிர்
ஈந்தவள் போகும் வரையில்
யாதார்த்தமான வெறும் கணக்கு!
பாசாங்கில்லாப் பாசம்
இனி எங்கேயெனப்
பொங்கிக் கதறி அழும்
மனதின் உயிர்த்துடிப்பு
அவள் சுவாசத்தைக்
காற்றில் தேடி அலைந்தபடி..

EN KANAVAR RAVIYIN ANNAI IRAIVANADI SERNTHAAR.. :((

மேகப்பூக் கணைகள்...

வானம் எய்த
மேகப்பூக் கணைகள்
மோகம் கொண்டு
புவியுடல் தழுவ
இராகம் பிறந்தது
மழை விடு தூதில்...




---கீர்த்தனா---

மொழியிழந்தோம்


உயிர்த்தமிழ் அமுதாய்
உறவாடிய நாவில்...
அலுப்போடு உறவாடும்
அந்நிய மொழியின் தேவை!

உபயோகம் இன்றி
உள்ளே அடங்கிய அமுதம்!
வருடக்கணக்கில்
ஆழ்மனதின் வேதனையாய்
உணர்வுடன் உறைந்து போய்!

வெம்பியழும் மனது
தமிழன்னையிடம்
மன்னிப்புக் கோரி
ஒவ்வொரு கணங்களும்!

இலக்கணமும் இலக்கியமும்
மங்கிய புகை ஒளியாய்
முழுமை அற்று மறதியின் பிடியில்...

நாளை என் வம்சம்
அன்னை மொழி மறந்த நாவுடன்
புலம் பெயர் நாட்டில்!

நக்கினார் நாவிழந்தார் அன்று!
நக்கினோம் மொழியிழந்தோம் இன்று!
உறைக்கும் உண்மை இருப்பினும்
சுரணையற்று தொடருகின்றோம்...
தொடர்ந்தும் தொடர்ந்தும்...
நாடிழந்து அகதிகளானதால்....

---கீர்த்தனா---

Wednesday 7 August 2013

வலி..

வலி எழுத விரும்பவில்லை
எழுதுகோல் தொட்டதும்
வலிகளே வரிகளாய்
உணர்வுகள் ரணங்களாய்
உடைந்து சிதறின வார்த்தைகள் ...
கடிவாளம் வலிகளுக்கும்
இறக்கைகள் கனவுதேசத்துக்கும்
கைகள் ஏந்திக் கடவுளிடம்...

---கீர்த்தனா---

Tuesday 6 August 2013

ஆழ் உறக்கம்...

தடையில்லாச் சிறகுகள் வேண்டும்...
வாடகையில்லா வான்வெளியில்
சுகமாக மிதந்து மிதந்து
பறந்தது பறந்து களைத்தபின்னே!

நீளப்பரப்பிய மேகக்கட்டிலில்
வெண்பஞ்சு மெத்தைக்குள்
பொன்பஞ்சு உடல்புதைத்து
வெண்மதித் தண்மையில்
மென்குளிர் தழுவிடவே!

பொன்னெழில் செங்கதிரோன்
சுட்டெழுப்பும் கணம் வரையில்
வாழ்வின் அவலங்கள் மறந்து
வானத்து வண்ணப் பறவையாய்
நட்சத்திரப் பூக்குவியல் மத்தியில்
மெய்மறந்த ஆழ் உறக்கம்...

---கீர்த்தனா---

ஒற்றைக் குயிற் பாட்டு....

நீண்ட பெரு வெளியில்
மிரட்டிச் சூழ்ந்த இருளில்...

அண்டசராசரமும்
இடிந்து விழுந்த உணர்வில்...

ஒவ்வொரு நிமிடத் துளிகளும்
பென்னம்பெரு நரகத் துளிகளாய்...

தனக்குள் அடக்கிய துன்பச்சுமைக்குள்
தன்னையே அடக்கம் செய்யும்
ஆதரவற்ற நிலையில்...

வாழ்வாதாரம் தேடும்
ஒற்றைக் குயிற் பாட்டாய்
உள்ளே எழும் கேவலின் சோக ராகம்
எங்கோ தூரமாய் யாருக்கும் கேட்காமலே...

---கீர்த்தனா---

Wednesday 31 July 2013

கனவுக் கதறல்கள்

நீண்ட வான் பரப்பின்
நீலக்கடல் விரிப்பில்
நிலவின் காலடியில்
நித்திலங்களாய்க் கொட்டி அங்கே
சிதறுகின்றேன் முற்றுமாய்...

ஆயிரம் ஆயிரமாய் ஒளிவீசும்
நட்சத்திரக் கண்கள் கொண்டு
நான்கு திக்கும் தேடித் தேடி
எங்கு சென்றாய் நீ என
பரந்த இருள் வெளியினிலே
கனவுக் கதறல்கள்
நாள் தோறும் தூக்கத்திலே...

---கீர்த்தனா---

Tuesday 30 July 2013

வலிகளின் அறுவடை

ஆணவத்தின் உச்சப்புள்ளியில்
ஆட்டுவிக்கும் முறைமை!!
ஆற்று வெள்ளமாய் கண்ணீர் பெருக்கி
ஆதங்கத்துடன் தொடரும் உறவுகள்!!

ஆதிக்கம் செலுத்துதல் தான்
ஆண்மைக்கு பெருமை என நம்பும்
ஆண்கள் சிலரின் மனப் போக்கில்
அடிபட்டுச் சிதையும் குடும்பக்கோவில்!!

ஆசைத் தாயின் கண்ணீர் பார்த்து
ஆறாத காயம் கொண்ட பிஞ்சு நெஞ்சங்களின் 

ஆழ்மனதில் புரையேறிக் கிடக்கும் வலிகளின் 
அறுவடையாய் கேள்விக்குறியாகும் 
எதிர்கால இலட்சியங்கள்!!

எந்த உரிமையில் மனம் சிதைக்கப்படுகிறது???
பாசத்தின் வலிமையின் தவறான பயன்படுத்தல்
தமை விட்டு நீங்க மாட்டார்கள் எனும்
நம்பிக்கையின் எதிரொலி!!
பாசத்திற்கு பரிசாக வன்முறை!!

(சிலரை மட்டுமே இங்கே குறிப்பிட்டேன்..ஆழமான அன்போடு, உணர்வுகள் மதிக்கும் நிறைய பாசமான ஆண்களை இங்கே குறிப்பிடவில்லை. கண்கூடாக கண்ட சில உண்மைகளின் உணர்வு வெளிப்பாடு மட்டுமே இந்த கவிதை. யாரையும் நோகடிக்கும் நோக்குடன் இல்லை--- அன்புடன் கீர்த்தனா--- ♥)

மீண்டும் தனிமைக்கூட்டுக்குள்...

சுட்டு விரல் நீட்டி
அதோ பார் இதோ பார் என
இயற்கையின் ஒவ்வொரு துளியையும்
உயிர்நட்புடன் பகிர்ந்து ரசித்த கணங்களில்
அவளின் செல்லக் குழந்தையாய் நான்...
தாய்மையுடன் ரசித்து தலைகோதிய அவள்...

கண்களுக்குள் நிறைத்த
காட்சிகளின் களிப்பினிலே
கட்டி அணைத்து அணைத்து
கன்னத்தில் ஒற்றி வைத்தேன்
ஆனந்தத்தின் வெளிப்பாட்டினை...

முட்டிய துன்பம் மீண்டும் சூழ
நெஞ்சினுள் ஏதோ கனமாய் அழுத்த
கெட்டியாகப் பிடித்த கரங்களை விட்டு விலகி
மீண்டும் தனிமைக்கூட்டுக்குள்...

---கீர்த்தனா---

Wednesday 17 July 2013

என் வாழ்வின் உயிர்ப்பே...


சிறியவன் தான் நீ
தாயுள்ளம் கொண்ட
பெரியவனாய்...
நோயுள்ளம் கொண்ட
பூமனதை வருடிக் கொடுக்கும்
பாச மென்னிறகை
ஆண்டவன் கையிலிருந்து
எனக்கெனப் பிடுங்கி வந்தாயோ?
நேசத்தின் மேன்மை தனை
எங்கு நீ கற்று வந்தாய்?

முகம் பார்க்கவில்லை
யாரிடமுமில்லா
அழியாப் பாசம் உன்னிடம் மட்டும்
விஸ்வரூபமாய் வியாபித்து...
வீசுந் தென்றலூடே
நட்புக்கு உயிர் கொடுத்து
உயிருக்குள் உறைந்தாயே...

அனுதாபம் கொண்ட அன்பு
கேலி சொன்னார் சிலர்...
நம்ப மாட்டேன் நான்
நம் உயிர் பூவுள்
பூத்த அழகு அன்பு...

மேன்மை கொண்ட மனிதா!!
என் வாழ்வின் உயிர்ப்பே...
எதுவும் வேண்டாம்
உயிரின் இறுதி வரை
உனதன்பு கொடு!
உன் மென்மை வார்த்தையில்
உயிர் தழைத்து செழிக்கும்...
துன்பத்தின் தடை அனைத்தும்
கண்ணீர் அடக்கி தாங்குவாள் உன் தோழி!

புற அழகு என்னிடம் இல்லை
ஆழம் தோண்டி நிறைத்த ஊற்றில்
பொங்கிப் பெருகும் அன்பின் அழகு,
கடல் , வானம் ,காற்றை நிறைத்து
அழகாய் உன்னைச் சுற்றி
உன் குடும்பத்தைச் சுற்றி
வியாபித்து நிறைவாக நிறைவாக..

என் இறப்பின் பின்னும் பூவாய்
உன்னுள்ளத்தில் மலரும்
மென் சிறப்பு வரம் வேண்டி...

---கீர்த்தனா---

தீண்டும் தீண்டாமை...

தீண்டும் தீண்டாமை
வேண்டாம் கொடும் பாவம்!!
கண்டேன் இரு கண்ணில்
கழிவிரக்கப் பிறப்புரிமை!!
வேண்டிப் பிறக்கவில்லை
எந்த இனம் வேண்டுமென!!

நாடி நரம்புகளில்
செங்குருதி ஒன்றே சுழற்சி!!
உணர்வுப் புலன்கள்
மரத்துப் போகவில்லை
எங்கேயும் வலிகளின் சுமை!!

சாதியம் எரிக்கும்
அக்கினிக் குஞ்சுகள் எங்கே???
கொத்திக் குதறிச் சகமனிதர்
வலி சுவைக்கும் நரகாசுரரை
வதம் செய்ய....

---கீர்த்தனா---

மீண்டும் கூடும் குளிர்மழை மேகங்களாய்....

கண்மூடிக் காதலிப்போம்
காதலின் காயங்களையும்!
கடந்து போன பொற்காலம்
இன்றைய கசப்பினில் இனிப்பாய்!

கலைத்து விட்டால் என்ன??
கருவுற்று ஓரிடத்தில்
மீண்டும் கூடும்
குளிர்மழை மேகங்களாய்
இனிமை நினைவுகள்!!!

---கீர்த்தனா---

நட்பின் ஆழங்கள்!!!

நட்பின் ஆழங்கள்!!!
வெல்லட்டும் வேதங்கள்!!

வக்கிரமில்லா
அன்பின் அலைகள்!!
விலையில்லா
புதையற் பொக்கிஷங்கள்!!

பால் வேறுபட்டு
மனம் ஒன்றுபட்டு
காயம் துடைக்கும்
நேயம் அதில்
ஆண்டவனின் அருளாட்சி!!

---கீர்த்தனா---