Monday 17 March 2014

விட்டுவிடு...

துரத்தாதே பறக்கட்டும்...
தூரமாய் காற்றில்
மிதக்கட்டும்...

எட்டிப் பிடிக்காதே
பட்டிறகை உதிர்த்து விட்டு
மரித்தல்லவா போய்விடும்...

பட்டாம்பூச்சி அழகு
படைக்கப் பட்டது,
பார்ப்பதற்கு மட்டுமே...

---கீர்த்தனா---

Tuesday 11 March 2014

ஆதவனும் வரம் தந்தான்!

கருங் குச்சிக் கிளைகளுக்கு
இளங் குருத்து உடை வழங்க...
மனங் கொண்ட ஆதவனும்
மாதங்கள் பல கடந்து வந்து
மெதுவாக இருள் பிரித்து
மஞ்சள் வெயில் வரம் தந்தான்!

சன்னலோர ஏக்கங்கள் விடுத்து
கன்னம் தாங்கிய கரம் பிரித்து
வண்ணங்கள் அணியப் போகும்
வசந்த காலத்தை கட்டியணைக்க...
விழி கொள்ளா ஆசை நிரப்பி
இயற்கையன்னை மகவு இவள்
இன்றே கிளம்புகிறாள்!  :)

<3 ---கீர்த்தனா--- <3

Friday 7 March 2014

பெண்ணே!!!!

அக்கனிக் குண்டங்களின்
அடி வயிற்றுக்குள்
வெந்து போய்விட
பிறப்பு எடுக்கவில்லை..
பெண்ணே!!!!

செவ்வொளிச் சூரியனின்
செங்கதிர்களை நோக்கிய
குளிர்ச்சிப் பயணம் இது!!

தீயவை தண்மையின்
தீர்த்தலாய் ஆத்திரமின்றி
தீர்த்திடுவாய்!!

அட்சய பாத்திரம் தாங்கி
அன்பினை அள்ளி
வழங்கிடுவாய்!!!

மன சாஸ்திரம் அறிந்து வாழ்ந்திட
குண ஸ்தீரி இவளென போற்றிட
மாண்பு மிகு பெண்மையே புறப்படு!!
வெண் மனப் பொன்மகள் நீ என்று காட்டிடு !!!

--கீர்த்தனா (கீதா ரவி)---


எனை ஈன்ற அன்னைக்கும், சிற்றன்னைமாருக்கும், சகோதரிகளுக்கும்,  அன்புள்ளம்  கொண்ட அனைத்து அன்புத்  தோழிகளுக்கும் ... அன்புத் தோழர்களின் துணைவிகளுக்கும்..அனைவரது அன்னையருக்கும்...உறவினர்ப் பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்...  <3 :)

Thursday 6 March 2014

நெஞ்சோரம் கொஞ்சம் ஈரம்...

பெற்றவர்கள் இரத்தச்சாறை
பருகி வளர்ந்ததன் நினைவை
பத்திரமாய் சுமக்கும்
பண்பானவர்கள் இருக்கும் வரை
அகல வாய் திறந்த
முதியோர் இல்ல வாசல்களுக்கு
இரை கிடைக்கப் போவதில்லை!!!

---கீர்த்தனா---

(நல்ல மனம் படைத்தோர் அநாதரவான பெற்றோர்களுக்கு தஞ்சம் கொடுக்கிறார்கள் அவர்களுக்கான பதிவல்ல இது.. பெற்றவர்களை காக்கும் கடமை மறந்த பிள்ளைகளுக்கானது. என்ன வாழ்நிலை ஆதாரம் கிடைத்தாலும், அங்கே பிள்ளைப் பாசத்துக்கான இதயம் நிரம்பிய ஏக்கத்துடிப்பின் வலி
அனைத்துப் பெரியவர்களின் கண்களில் நிரந்தரமாய்
உறைந்திருக்கின்றது... நாளை நமக்கும் அதேநிலை??? )

ஒலி நாதம்!

மனசஞ்சலம் கழுவித்
துடைக்கும்
மழையின் ராகம்!
காதைக் காதலுடன்
நனைக்கும்
சலசல ஒலி நாதம்!

இறுகப் போர்த்திய
போர்வைக்குள்,
துளிகள் தழுவும்,
உணர்வுடன் இமைமூடி...
மழையொலி ரசித்தபடி....

---கீர்த்தனா---

பேதம் பார்ப்பதில்லை!!!!

வாய்க்கால் வரப்போரம்
பாயும் தண்ணீர்
பேதம் பார்ப்பதில்லை!!!!
நெல்லொடு புல்லுக்கும்
வளருதற்கு உதவுதல் போல்
நான் பருக.. நீ பருக...
ஒரே ஆறு, ஒரே குளம், ஒரே தண்ணீர்...

வீசும் இனிய தென்றல்
பேதம் பார்க்கவில்லை!!!
உயர்வென்ன தாழ்வென்ன...
உன்னைத் தழுவி, என்னைத் தழுவி
பின் பலரைத் தழுவி....

உனக்குள் புகுந்து, எனக்குள் புகுந்து,
பின் பலருக்குள் புகுந்து
ஒரே காற்று, ஒரே மூச்சு...
தீண்டாமை எங்கே...
சாதி மதம் எங்கே... - அதை
நீ காற்றிடம் காட்டு
நின்று விடும் உன் பேச்சு!!!

---கீர்த்தனா---

ரோஜா...

நீ இறைவன் வடித்த கவிதை!!
நான் நிறைந்த மனம் கொண்ட ரசிகை!!
உன்னிதழ் மென்மையும்
உன்னழகு வண்ணங்களும்
ரசிக்கத் தெரியும்...
அவன் வடித்த கவிதைக்கு இணையாய்...
கவி வடிக்கத் தெரியவில்லை!!

---கீர்த்தனா---

தொடர் மழை

வானம் முழுவதும்
பொத்தல்கள்!!
காதுத் துளை அறுந்த
ஊசி முனைகள்...
மண்ணை விடாமல்
துளைத்தபடியே!!


 ---கீர்த்தனா---

உடற்கூட்டை விட்டு...

விழிநீருக்குள் அடங்காத
யாருக்கும்
உணர்த்த முடியா
உடல் வாதனைகள்!
மன வேதனைகள்!

உடற்கூட்டை விட்டுப்
பறக்கத் துடிக்கும்
கசங்கிச் சிறகுதிர்த்த
பட்டாம் பூச்சி உயிர்!


 ---கீர்த்தனா---

நினைவுப் பொதிகை

நினைவுப் பொதிகைக்குள்
நனைந்து நீராடி தினம்
புனைந்த சில வரிகள்
புன்னகைப் பூக்களாய்
இதழ்க்கடையோரம்...
இன்னும் ஒட்டிக்கொண்டு...


 ---கீர்த்தனா---

மௌன அம்புகள்...

சின்ன சின்ன
சந்தோசப் பூக்களையெல்லாம்
உன்னிடமே பிரசவிக்கிறேன்!
ஏனெனில் எனக்காகவெனினும்
இணைந்து சிரிப்பாயென!

துரத்தும் துன்பங்கள்
உன்னிடம் களைகிறேன்!
எனக்காய் கொஞ்சம்
தோள்களில் தாங்கிக் கொண்டு
பஞ்சுப் பொதிகளை
என்னுள் நிரப்புவாயென!

சடுதியில் சில பொழுதில்
மௌன அம்புகள்...
தோழமை நெஞ்சினில்
கூர்மையாய் பாய்ச்சினால்
சுருண்டு தான் போகிறேன்
சுத்தமாய் உயிரிழந்து...


 ---கீர்த்தனா---

நகர்வின் விளைவுகள்...


சதுரங்க விளையாட்டின்
விதிகள் எதுவும்
என்றுமே புரிந்ததில்லை!
கற்றுக் கொள்வதற்கு
முயன்றதும் இல்லை!

விரல்களால் நகர்த்தப்படும்
காய்களாய்,
நகர்த்தப்பட்டுக் கொண்டே
படைத்தவன் எண்ணப்படியே...

கற்றுக்கொள்ளாத குற்றமோ?
நகர்த்திச் செல்லும் அவன் தீர்ப்போ?
நகர்வின் விளைவுகள்...

---கீர்த்தனா---

சுடும் துளிகள்...


தேகம் நோக வைத்து
துளைக்கிறது
கனமழையின்
பார ஊசித்துளைகள்!

தடை செய்வதற்கு
குடையினைக் காணவில்லை
எங்கேயும்....

குளிர் மழையோடு
சுடும் துளிகள்
விழிகளில் பாரமாய்...

---கீர்த்தனா---

ஓசை


எங்கிருந்தோ பாடும்
ஒற்றைப் பூங்குயிலின்
சோகம் இழைந்த பாடல்
சன்னமாக என் காதினில்...

அடர் காடுகளையும்
ஊடறுத்து நீண்டு செல்லும்
நதிமகளின் ஒற்றைப் பயணத்தின்
சலசல ஓசை
சன்னமாக என் காதினில்...

ஆழ் மனதினில்
கரைபுரண்டோடும்
அன்பின் அலையோசை
மென்மையாக என் காதினில்...

எலும்புகள், நரம்புகளை
வலிந்து ஆட்கொள்ளும்
வலியின் காதல் தனை தாங்கா
பட்டாம்பூச்சி உயிரின்
படபடப்பு சிறகடிப்பொலி
வன்மையாக என் காதினில்...

---கீர்த்தனா---

நகர்கின்ற மேகங்கள்

நில்லாமல் மேகங்களும்
நம்பிக்கையுடனேயே நகர்கின்றன!

நிலைகுலைந்து நிற்கையில்
நெஞ்சினில் மலைப்பாறை
விழிகளில் மழைச்சாரல்!

எங்கிருந்தோ நிமிட நேரத்தில்
எழுகிறது யானை பலம்...
தும்பிக்கையை உயர்த்தி
நம்பிக்கையுடன்........

--- கீர்த்தனா---