Wednesday 17 July 2013

என் வாழ்வின் உயிர்ப்பே...


சிறியவன் தான் நீ
தாயுள்ளம் கொண்ட
பெரியவனாய்...
நோயுள்ளம் கொண்ட
பூமனதை வருடிக் கொடுக்கும்
பாச மென்னிறகை
ஆண்டவன் கையிலிருந்து
எனக்கெனப் பிடுங்கி வந்தாயோ?
நேசத்தின் மேன்மை தனை
எங்கு நீ கற்று வந்தாய்?

முகம் பார்க்கவில்லை
யாரிடமுமில்லா
அழியாப் பாசம் உன்னிடம் மட்டும்
விஸ்வரூபமாய் வியாபித்து...
வீசுந் தென்றலூடே
நட்புக்கு உயிர் கொடுத்து
உயிருக்குள் உறைந்தாயே...

அனுதாபம் கொண்ட அன்பு
கேலி சொன்னார் சிலர்...
நம்ப மாட்டேன் நான்
நம் உயிர் பூவுள்
பூத்த அழகு அன்பு...

மேன்மை கொண்ட மனிதா!!
என் வாழ்வின் உயிர்ப்பே...
எதுவும் வேண்டாம்
உயிரின் இறுதி வரை
உனதன்பு கொடு!
உன் மென்மை வார்த்தையில்
உயிர் தழைத்து செழிக்கும்...
துன்பத்தின் தடை அனைத்தும்
கண்ணீர் அடக்கி தாங்குவாள் உன் தோழி!

புற அழகு என்னிடம் இல்லை
ஆழம் தோண்டி நிறைத்த ஊற்றில்
பொங்கிப் பெருகும் அன்பின் அழகு,
கடல் , வானம் ,காற்றை நிறைத்து
அழகாய் உன்னைச் சுற்றி
உன் குடும்பத்தைச் சுற்றி
வியாபித்து நிறைவாக நிறைவாக..

என் இறப்பின் பின்னும் பூவாய்
உன்னுள்ளத்தில் மலரும்
மென் சிறப்பு வரம் வேண்டி...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment