Thursday 7 June 2012

தம்பிக்காக சில ஈரத்துளிகள்...

 ஒரு செடியில் ஐம்மலர்கள்
ஒன்றாகப்பூத்தோம்
அன்பினாலும் பாசத்தினாலும்
பின்னிப்பிணைந்தோம்.

கூடிவாழ்ந்து கோடியின்பம்
பெற்ற அந்த நாட்களை
மீட்டுகின்றேன்
ஒவ்வொன்றும் சுவை...

பூமியில் வாழ்ந்த நிலவுகள் நாம்
நிலவினொளியில் அமர்ந்து
அன்னை கைகளால்
குழை சோறு உண்டதும்...
தந்தை மடியினில்
ஒன்றாய் அமர்ந்ததும்...

கதைகள் பலபேசி
சிரித்து மகிழ்ந்ததும்...
உன்னினிய நகைச்சுவைப்பேச்சில்
நாம் குலுங்கிச்சிரித்ததும்...

எனதொரு பக்கம் நீ
ஒருபக்கம் சின்னத்தங்கை
உனைதாண்டி உன்னன்பண்ணன்
அவன்பக்கம் பெரியதங்கையென
ஒன்றாய்ப் படுத்துறங்கியதும்…

படுக்கையிலே அக்காவெனக்கு
நாள்தோறும் பால் கொண்டுவந்து
தருமுன் வாஞ்சை நிறையன்பும்…
சோர்ந்து போகும் நேரமெல்லாம்
எனைத்தேற்றி நம்பிக்கை
தருமுன் வார்த்தைகளும்…
இன்னும் இன்னும்…
எல்லாம் நினைக்கையிலே
நெஞ்சினிலே அன்பின் ஈரம்...

மழைமுகில்வண்ண நிறத்தில்
கண்ணனுக்கு ஒப்பாய்
அழகில் சிறந்தவனே…
தாய்தன்னை நேசிப்பவன்
தாய்நாட்டினையும் நேசிப்பான்
தாய்நிலம் காக்க சென்று
சிறை சென்று வாழ்பவனே…

உனைப்பிரிந்து வாடும்
உனதன்பு மனையாளுடனும்
உன்மூன்று நல்முத்துக்களுடனும்
சேரும்காலம் விரைவில் வரட்டும்...
சூரியன் பார்வைபட்ட பனித்துளிபோல்
உன்துன்பமெலாம் விலகட்டும்...
உன்பிரிவுத்துயர் தாங்காது
வான்சென்ற எம்தந்தை என்றும்
தெய்வமாய் உன்னுடனேயிருப்பார்..

சிறைநீங்கி உன்வரவுக்காய்
கண்களில் நீர்ச்சாரலுடன்
நெகிழ்வுடன் காத்திருக்கும்
அன்புஅன்னை, அன்புமனைவி
பிள்ளைகள், அன்புச்சகோதரர்கள் ...
இன்றையநாளில் இருந்து
நடப்பவையாவும் நன்மையாகட்டும்…

------கீர்த்தனா------


No comments:

Post a Comment