Sunday 17 June 2012

விழிநீரால் ஓர் கடிதம்…

விண் சென்ற எந்தைக்கு                                              
விழிநீரால் ஓர் கடிதம்…
அலைபேசியினிலே 
தேனாய் பாயும் குரல்…
கேட்டே நான்
ஓர்வருடம் ஆகிறது…

சிறுவாட்டம் என்றாலும்
அப்பா என்று அழுவேனே…
இதமாக எனையாற்றி
அன்புமழை பொழிவீரே…
ஆறுதல் சொல்லியே

எந்தன் வாழ்வை நகர்த்தி
செல்ல யாருமில்லை
எனக்கின்று…

வலிகள் எல்லாம் ஓர்
முடிச்சாய் இதயக்கூட்டுள்
குவிந்திருக்க கதறியழ
நீங்களின்றி பேதைமனம்
தவிக்கிறதே…

ஒன்றா இரண்டா...
உம்பெருமை எடுத்துசொல்ல…
பிள்ளைகளே உலகமென
வாழ்ந்த கதை
நான் சொல்ல…

இறுதிநாள் அன்றுகூட
அலைபேசியூடாய்
கலங்காதே மகளே
போய் வருகிறேன்
என்ற..உங்கள் குரல்
இன்றும் கூட
காதில் ஒலித்து
உயிர்வலியைத்தருகிறதே...

எந்தையே உமக்கான
வெற்றிடம்..........
யாராலும் நிரம்பவில்லை...
என்னுயிர்த்தந்தையே...
கனத்த இதயத்துடன்
வலிக்கும் உணர்வுகளுடன்
அப்பாக்கள் தினவாழ்த்தை
கண்ணீர்ப்பூக்களுடன்
வானுக்கு அனுப்புகின்றேன்...

----கீர்த்தனா----

1 comment: