Sunday 7 April 2013

"ஊர்க்காற்று"




அழிந்த எம் கிராமத்தை விட்டு புலம் பெயர்ந்து வாழும் என் கிராமத்து மக்கள் பெரும்பான்மையோர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் "ஊர்க்காற்று" எனும் ஒன்று கூடல் நிகழ்வில் இணைந்து மண்வாசனையை நுகர்ந்தோம்...அந்த நினைவுப் பதிவு இந்தக் கவிதை...அவ்வளவு மகிழ்வு 28, 30 வருடங்களின் பின் உறவுகளை சந்தித்த உணர்வின் வெளிப்பாடு சொல்ல வார்த்தைகள் இல்லை... :))))))))))) ♥

***************************************************

எழில் கொஞ்சும் நம் கிராமம்
குரும்பையூரின் நாமம் தனை
உச்சரிக்கும் போதினிலே
உணர்வுக் குழம்புகளாய்...நாம்...
புரண்டு தவழ்ந்த செம்மண்ணின்
புகழ் வாய்ந்த பெருமை தனை
நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும்
தாயவளைத் தொலைத்துத்
தவிக்கும் குழந்தையின் உணர்வுடனே...

திணைப்புலங்கள் ஐந்து எனக் கற்றோம்
ஆறாந்திணைப் புலமாய் நாமும் கண்டோம்
அன்பும், அன்புசார் நிலமுமாய்
குரும்பசிட்டிக் கிராமந்தனை!

எட்டுத்திக்கும் சென்று தான் நானும் பார்த்தேன்!
ஏழு கடல் தாண்டியும் தான் தேடித் பார்த்தேன்!
நம் வீட்டுக் கிணற்றுநீரின் சுவை...
இக்கணம் வரை...எங்கேயும் கிட்டவில்லை!

ஓங்கி உயர் பனங்காடுகளும்..
தென்னங் கீற்றுகளில்
தென்றல் உரசும் சலசலப்பும்..
வெண்மலர் தாங்கி நின்று
குடை விரித்த தேமாக்களும்...

அமைதி சூழ் ஆலயங்களும்
சிங்காரமாய் அசைந்து வரும் - நம்
கலைஞர் கைவண்ணச் சிறப்பில்
அம்மன் கோவிற் சித்திரத்தேரும்...
இனிய திருவிழாக் காலங்களும்...
பச்சையம் போர்த்திய விளைநிலங்களும்
இச்சை இன்னும் தீராமல்...
மனக் கண்ணுள் இரசித்தபடி...

இளைஞர் இளைப்பாறலுக்கு
நிழல் தந்த அரசமரமும், அரசடிச்சந்தியும்...
சிட்டுக் குருவிகளாய் நாம் சிறகடித்துத் திரிந்த
ஒற்றையடிப் பாதைகளும்...
மணிகடைச்சந்தி, குரும்பசிட்டிச்சந்தி..
மாயெழு, வவுணத்தம்பை வீதிகளுடன்
இன்னும் பிற வீதிகளும்...

முதலெழுத்தை முத்தாய் நாம் கற்ற
பொன் அவர் தந்த பரமானந்தா பாடசாலையும்...
விளையாட்டு, கலைப்பணி பெருமையுடன்
வளர்த்து வந்த சிறு தமிழ்ச் சங்கங்களும்...
கல்வியிற் சிறந்து மேன்மை பெற்ற
மேதைகளின் பெருமைகளும்...
சிம்மக் குரலோன் நேர் கொண்ட பார்வையுடன்,
நாம் கண்ட பாரதியாய் நடராஜா மாஸ்டரும்...
பெயர் குறிப்பிடா இன்னும் பல
சமூக ஆர்வலர்களும்...

இன்னும் இன்னும் சொன்னவை சில
சொல்லாதவை பலவாய்ப் பசுமையாய்ப் பதிந்த
குரும்பையூரின் அற்றைய நினைவுகளை...
சூல் கொண்ட தாயாய் இற்றைவரை
நெஞ்சினுள்ளே சுமந்தபடி,
புலம் பெயர்ந்த நாடுகளில் நாமெல்லாம்!!!
நெஞ்சம் உகுக்கும் செந்நீரின் ஈரத்துடன்
அழிக்கப்பட்ட கிராமத்தின்
பழைய கோலம் தேடியபடி
ஏக்கத்துடன் இன்றும்...

அன்று ஊர்க்குருவிகள் நாமெல்லாம்
ஊர்விட்டுப் பறந்து சென்றோம்
இன்று ஊர்க்காற்றுத் தென்றலது
ஒவ்வொருவர் காதினிலும்
பாசம் கொண்டு அழைப்பு தனை
மென்மையாய் வருடிச் சொல்ல..
ஓடி வந்தோம் நாமுமிங்கு
வாழ்வின் இறுதிக்குள்
ஒருமுறையேனும்
உறவுகளுடன் சங்கமிக்க...

ஒருங்கிணைத்த உறவுகட்கும்
ஒப்பில்லாச் சொந்தங்களுக்கும்
ஆயிரம் கோடி நன்றி...
நெகிழ்வுடனே நெகிழ்வுடனே
நெஞ்சாரக் கூறி நின்றோம்...

---கீர்த்தனா (கீதா ரவி)---

2 comments:

  1. மகிழ்ச்சியான வரிகள்... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சார்..

      Delete