Tuesday 30 April 2013

அப்பா...!!!


காற்றினில் நீங்கள் கலந்த போது....
வேற்றுலகில் நான் தனித்துப் போய்...
வாழ்ந்தவரை துன்பச் சிலுவைகள்
ஏற்றுக் கொண்டீர்...எனை இலகுவாக்கி...
தேற்றுவாரற்று இரவின் மடியினில்
இறுக்கும் துன்பம் களைவாரின்றி...
அப்பா! அப்பா! எனத் தேம்புகின்றேன்
தூக்கம் தொலைத்து விழிநீர் பெருக்கி...

வற்றாத உங்கள் பாசத்துக்காய்
வறண்ட நிலமாய் நெஞ்சம்...
உறிஞ்சிக் குடிக்கும் தாகத்துடன்...
காற்று சுமந்துவரும் விடிகாலைப் பொழுதுகளில்
உயிர்ப்புடன் «கீதாஞ்சலி» எனுமழைப்பை....

எமனும் எதற்காய் வஞ்சம் வைத்தான்
குரல் வளையை பிடுங்கிச் சென்றான்!
உளம் நிறைக்கும் பாசத்துக்காய்...
கருணை கொஞ்சும் புன்னகைக்காய்...
ஜீவனுள்ள அன்புக்காய்...
உயிர் தொடும் உச்சி முகர்தலுக்காய்...
ஏங்கிக் கைகளை விரித்தபடி...
சின்னஞ் சிறு சிறுமியாய் இன்னும்...
கண்ணீருடன்... அப்பா...!!!

இன்று மட்டுமல்ல என்றும் உங்கள் நினைவு தினமே....

No comments:

Post a Comment