Friday 12 April 2013

இத்தனை அழகையும் பருக மறுத்து.......


எத்தனை அழகாய்
பிரபஞ்சம் படைத்தான்
இத்தனை நிறங்கள்
கண்ணுக்கு விருந்தாய்...
காண்பதெல்லாம் கனவல்ல
கண்முன் அதிசய ஓவியமாய்... 

பட்டாம் பூச்சிச் சிறகின் நேர்த்தி
பட்டுப் பூவின் இதழின் நேர்த்தி
வண்ணமயிலின் துள்ளும் ஆட்டம்
நீலக் குயிலின் இனிமைப் பாட்டு
பச்சைக் கிளியின் கொஞ்சும் பேச்சு
மிதக்கும் வெண்ணாரைக் கூட்டம்

தலையசைத்தாடும் தென்னங்கீற்று
தடையின்றிப் பாயும் வெள்ளியருவி
தொங்கி மிதக்கும் வெண்பஞ்சு மேகம்
பொங்கி நுரைக்கும் நீலக் கடல்
வெண்மணல் பரத்திய அழகிய கரை

ஓங்கி உயர் மரகத மலைகள்
மாருதம் வீசும் மருத நிலங்கள்
இரவினை ஆளும் நிலா மகராணி
இவளினைச் சூழ்ந்து நட்சத்திரத் தோழியர்
இரவினில் கமழும் மல்லிகை வாசம்
சாமரம் வீசும் வேப்பமரங்கள்

கதிரவன் அந்தப்புரம் தாமரைக்குளமும்
சந்திரன் அந்தப்புரம் அல்லிக்குளமும்
அழகாய் விரியும் அற்புத விடியல்
அந்தியில் உரசும் பகலும் மென்னிருளும்
இன்னும் சொல்லா ஆயிரம் அழகும்
இத்தனை அழகையும் பருக மறுத்து
அமைதி இழந்து எதையோ தேடி...

---கீர்த்தனா---


2 comments:

  1. வர்ணனை அருமை...

    இத்தனையும் இருக்க...

    ...அருமையாக முடித்துள்ளீர்கள்....

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்கும் உங்களுக்கு அன்புடன் நன்றி... :)

      Delete