Tuesday 19 February 2013

மீட்டலின் உயிர்ப்பில் உருகி.........

மீட்டிய கரங்களின் நடனம்...
என்னுள்ளே என்னுள்ளே...
நாட்டியம் ஆடின நரம்புகள்!

உயிருக்குள் நாதம் சுண்ட...
மெய்மறந்து கண்கள் மூட...
கண்களில் நீர் கசிய,
நெஞ்சம் கசிந்துருக,
மயிர்க்கால்கள்
ஒவ்வொன்றாய்ச் சிலிர்த்து...
ஏதோ ஒன்றோடி,
உச்சந் தலைக்குள்....
உச்சமாய் ஒரு சிலிர்ப்பு பரவ...

எங்கோ ஒரு இனிய உலகில்
நான் மட்டும் மிதந்து மிதந்து
மெதுவாகப் பறந்து செல்ல....
வீணையின் தந்திகளைச்
சுண்டி மீட்டுகிறார்களோ?
இல்லையெனில்....

நம்முயிரைத்தான் மீட்டுகிறார்களோ?
நானறியேன்...உயிர் உருக
நனைந்தேன் நனைந்தேன்
வீணையின் நாத மழையிலே...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment