Saturday 12 January 2013

அன்னைத்தமிழின் இன்றைய நிலை...

போட்டியில் அனைவரும் மூன்று கவிதைகள் கொடுத்திருந்தோம்..மூன்றுக்கும் சேர்த்து தான் மதிப்பெண் வழங்கினார்கள்..மூன்றையும் ஒவ்வொன்றாக இங்கே பதிவிடுகின்றேன்...


அன்னைத்தமிழின் இன்றைய நிலை...
*************************************

செந்தமிழின் இன்பெருமை
சிறுமை பெற்ற நிலையை இங்கு!
மனம் வருந்திக் கவி பாட
முயல்கின்றேன் நானும் இன்று!

சங்கம் அமைத்து அன்று - தமிழ்
வளர்த்தோர் பெருமை கண்டோம்!
சங்கை அறுத்து இன்று - உயிர்
குடிப்போர் சிறுமை கண்டோம்!

பொங்கு தமிழ் வளர்த்த கொங்கு நாடு தனில்
பைந்தமிழ் நற்பெருமை நைந்து போனதேனோ ?
சங்கத் தமிழ்ச் சுவையும் கம்பன் கவியழகும்
இன்னும் இனியவையும் சிறப்பறியாமலேனோ ?

அன்னைத் தமிழவள் இன்பச்சுவை தனை
தந்திட மறுத்தோம் நம் சந்தததிக்கு !
சிறப்பது ஆங்கில மொழியெனும் மோகத்தை
விதைத்து விட்டோம் சின்னப் பிஞ்சதற்கு !

கண்டம் விட்டுக் கண்டம் வந்தும்,
தமிழ் புகழ் பரப்பும் ஆர்வலர் கண்டேன்!
ஆங்கிலம் பரப்பும் ஆர்வலர் பலரை
தாய்த் திருநாட்டில் வலியுடன் கண்டேன்!

பிறமொழி அறிவதில் தவறொன்றுமில்லை!
தாய்மொழி மறுப்பதில் சிறப்பொன்றுமில்லை!
நா இனிக்க இனிக்கப் பேசிய செம்மொழி!
நா வளைக்க மறுத்து நாவிழந்து இன்று!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment