Tuesday 27 November 2012

வெளிச்சப்புள்ளிகளைக் காணவில்லை…

அல்லல் சூழ் இருளின்...
அடர் மேகக் கூட்டம்!
ஆசைகள் யாவுமே நிராசைகளாய்…
ஆவன செய்யப் படாமலே!
இருட்டினில் வெளிச்சப்புள்ளிகளை…
இகலோக எல்லைவரை காணவில்லை!

ஈவதற்கு மனம் கொண்ட- அன்பின்
ஈதற் கொடையாளி எங்கேயென…
உதடுகள் துடிக்க, உணர்வுகள் வெடிக்க…
ஊமைக்காயங்கள் கடும்வலி கொடுக்க…
எதிர்பார்க்கும் இரு ஈரவிழிகள்…
ஏக்கத்துடன் எங்கோ வெறித்தபடி…!

ஐக்கியமான அன்பின் ஆழப்பரிமாற்றம்…
ஒருகணத்தில் காற்றின் விசையையும் தாண்டி
ஓடிவரும்… காயங்களின் சுவடுகளை
ஒளடதம் தடவிப் பாசப்பூவால் ஒற்ற...!

---கீர்த்தனா---

அல்லல் = துன்பம்
ஈதல் = கொடுத்தல்
ஒளடதம் = மருந்து

No comments:

Post a Comment