Thursday 22 November 2012

மண்வாசனை


வானம் பொழியும்
நீர்க்கோடுகள்… பாய்ந்து வந்து
மண்மகளை முத்தமிடும்…
முதல் துளிகளை
ஆழ உள்ளிழுத்து
அவள் விடும் ஒரு மூச்சில்…
குப்பென எழுந்து
நாசியை நிறைக்கும்
இனிய மண்வாசனை!

மழைக்குளிப்பின் ஆனந்தத்தில்…
தழுவும் காற்றின் துணையுடன்…
நர்த்தனமாடும் பூக்களும் செடிகளும்!

பட்டுச் சிறகுகள் விரித்து…
நீர்முத்துக்களை
உதறிச் சிலிர்த்துக் களிக்கும்…
வண்ணவண்ணப் பறவைகளும்!

கால்களினால் நீர் துழாவி…
காகிதக் கப்பல் விட்டு…
சிரிப்பினிலே கலகலக்கும்…
சின்னஞ்சிறு குழந்தைகளும்!

நாடு விட்டு நாடு வந்தும்…
நாசியிலே மண் வாசனையும்…
நினைவுகளின் காட்சிகளும்…
நச்சென இன்றும்…

---கீர்த்தனா---

No comments:

Post a Comment