Sunday 9 June 2013

உள்ளங்களும் பனியாய் உறைந்து

எங்கேயோ எனது கவிதை வரிகள்!
எதற்காகவோ மனதின் அலை பாய்ச்சல்!
எந்திரத்தனமாய் உறவுகள்!
எதுவுமே இல்லாததாய் உணர்வுகள்!
ஏக்கமும் வெறுமையும் சூழ்ந்து வலிக்கும்
புலம் பெயர் வாழ்வு...

எதற்கான வாழ்க்கை????
கடமையாய் உண்டு, உறங்கி, எழுந்து
மறுபடி உண்டு, உறங்கி, எழுந்து
எதுவிதப் பற்றுமின்றி...
நேரம் காலமின்றி உழைப்பது
ஒன்றே குறியாய்...
சராசரி வாழ்வுக்கு ஓடியோடி
உழைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்...

சந்திப்பதெனில் நூறு தரம் சிந்தித்து
முன் கூட்டியே நேரம் குறித்து...
இயந்திரத்துடன் இயந்திரம் பேசுவது போல்
உணர்வுகள் இறந்த பிணைப்புகள்!

வாழ்வே வெறும் சூனியமாய்
பனியின் உறைவு உள்ளங்களிலும்!
திக்கெட்டும் பரந்து போய்
இரத்த சம்பந்தங்கள் எங்கெங்கோ
எதற்காய் வாழ்கின்றோம்???
அடிக்கடி எழும் கேள்வியுடன்...
தொடரும் பயணம்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment