Saturday 8 June 2013

புதைகுழி

இழப்புகளின் கடைநிலை வரை
திருந்தி விட நினைப்பதில்லை!
தாலிக்கயிறும் தன்னுயிர் விந்தும்
கொடுத்துப் பெற்ற உறவுகளின்
கண்ணீரும் சுடுவதில்லை!
தூக்கி எறிந்து செல்லாது
மாற்றி விடத் துடிக்கும்
பாசத்தின் கனமும் புரிவதில்லை!

அழகிய கூட்டின் நிம்மதிமூச்சு
குலைவதும் தெரிவதில்லை!
தெருவினில் படுக்கின்ற,
நிலை ஒன்று வரும் வரை
வருத்தமும் இல்லை!
மது அரக்கன் தட்சணையாக
தன்னுயிருடன் பிற உயிர்
பறித்திடப் போவதை உணரவுமில்லை!

உணருகின்ற நேரத்தில்
வாழ்வின் வசந்தங்கள் எதுவுமே
மிஞ்சப் போவதுமில்லை!!!!!
மீள முடியா ஆழத்துள் வீழ்வது நிஜம்..
எழ நினைத்தாலும் எழுவதற்கு வழியின்றி
புதைகுழிக்குள் முழுதாய் புதைந்து...
ஒரு கணம் ஒரே ஒரு கணம்
அனைத்தையும் நினைத்துப் பார்..
மனிதன் என்பவன் மிருகமாகிய,
உறைக்கும் உண்மை சட்டென சுடும்!!

---கீர்த்தனா---

மகிழ்வு அனுபவிப்பதற்காகவோ, இல்லையெனில் துன்பம் மனதை சூழுகையில் தற்காலிகமாக அதை மறப்பதற்கோ குடிப்பழக்கம் ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் மெல்ல மெல்ல மது மனிதனை முற்றாக ஆக்கிரமித்து அனைத்தையும் இழக்கச் செய்வது மறுக்க முடியாத உண்மை. எல்லாராலும் அதை அளவாகப் பாவிக்க தெரிவதில்லை. அதனுடைய பாதிப்பில் மதுவுடன் சேர்த்து விலங்கு குணமும் மெது மெதுவாக அவர்களை ஆக்கிரமிக்கிறது. மது அருந்துவதால் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கிட்டப் போவதில்லை. அவர்களை நம்பி வாழும் உயிர்களும் நடுத் தெருவுக்கு வரும் நிலையோ இல்லையெனில் விபரீத முடிவுகளுக்கு அந்த உறவுகள் ஆளாகும் நிலையோ ஏற்படலாம். ஒருவர் சுயநலத்தால் பல உயிர்கள் பாதிக்கப் படலாமா? அந்த குடிப்பழக்கம் இருப்பவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் மது அரக்கனால் பிடுங்கப்படும் என்பது, மிகவும் வலிக்கும் உண்மை. இன்றைய கால கட்டத்தில் அதிலிருந்து மீள்வதற்கு எவ்வளவோ நவீன மருத்துவங்கள் வந்து விட்டன. அன்புள்ளங்களே!! இது யாரையும் புண்படுத்த எழுதவில்லை. இந்த நிமிடத்திலிருந்து ஒருவராயினும் இந்தப் பழக்கத்தில் இருந்து மீளுவாரானால், அவர் வாழ்வுடன் அந்தக் குடும்பத்தின் வசந்தமும் என் எழுதுகோலுக்கு சாந்தி அளிக்கும்.. அன்புடன் என்றும் உங்கள் நலம் விரும்பும் கீர்த்தனா

2 comments:

  1. உங்கள் எண்ணம் நடக்கட்டும்... வேண்டுகிறேன்...

    பலரை மாற்றி இன்று சந்தோசமாய்...

    சிலர் மாற்றுவதற்குள் - மாறுவதற்குள் அவசரப்பட்டு "சென்று" விட்டனர்... இப்போது அந்த குடும்பங்கள் படும் துன்பத்திற்கு அளவில்லை...

    ReplyDelete
  2. unkal pani thodaraddum thozhaa.. oruvarai nammaal maatra mudinthaalum athu nam vaazhvin periyya kaariyamaai amayum

    ReplyDelete