எங்கும் செங்குருதி வீச்சம்! தனக்கு தனக்கு நடக்கையில் கொதிக்கும் நெஞ்சங்கள், அயல் வீட்டில் அயல் நாட்டில் நடக்கும் சம்பவங்களை உச்சுக் கொட்டியபடி கடந்து செல்கின்றன!
மனிதத்தை கொன்று குவித்தபடி மரிக்கும் போது, கொண்டு செல்ல முடியாதவற்றுக்கான போராட்டம்! சிலருக்கு தான் ஆறடி மண் கூட சொந்தம்! தணலில் வெந்து போவோருக்கு அதுவுமில்லை!
வாழும் காலத்துள் எளியோரை ஏன் வருத்துகிறார்கள்! எதற்காய் இன்னொருவர் உரிமைகளை உயிர்ப்பலி வாங்கிப் பிடுங்குகிறார்கள்!
அப்பாவியாய் உயிர் துறக்கும் எல்லா ஜீவன்களுக்குமாய் எதுவுமே செய்ய முடியாமல் உள்ளே கலங்குவோராய் மட்டுமாய்... இல்லையெனில் குமுறல்களை எழுதிக் கொட்டுவோராய் மட்டுமாய்... வாழ்க்கை தொடர்கிறது!
அடிப்படைத் தேவைகள் - பின் அடுத்த தேவைகள் - அதன் பின் ஆடம்பரத் தேவைகள் ஆசைகள் அடங்குவதில்லை தேவைகளின் பெருக்கம் குறைவதில்லை பணத்திற்கான அலைச்சலில் வாழ்வியலின் அழகு அடிபட்டுச் செல்ல உறவுகளிலும் விரிசல்கள்...!
பணம் பணம்... பணமே இன்றைய வாழ்வின் அழகியல் நிர்ணயம் ஆனதன்றோ...
திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்! கொஞ்சம் நின்று சுற்றும் பாருங்கள்... கொஞ்சும் இயற்கையின் இயல்புகள் நெஞ்சை இனிதாய் நிறைக்குமல்லவா...!
உணர்கொம்புகளில் உயிர் ராகம்... பாறை விளிம்பில் பாசத் தேடல்... உறைந்து போன தனிமைக்குள் மறந்து போன பூக்களின் வண்ணங்கள்... வண்ணத்துப் பூச்சிக்கும் எண்ணங்கள் சிதறுமோ....