Thursday 13 November 2014

வசந்தப்பூ

எதற்கோ பெரும் பிரயத்தனப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம்!
காலம் நம் பாதைக்குள் சிறைப்பட மறுக்கிறது என்பது நிஜம்!
காலம் கோடு போட்ட பாதையில் பயணத்தின் நிர்ப்பந்தம்!
வசந்தப்பூ ஒன்று எங்கோ காத்திருக்கும் என்ற நம்பிக்கை
நடையைத் துரிதப் படுத்துகின்றது!

அது கிடைக்காமலே கூட வாழ்க்கை அஸ்தமிக்கலாம்!
எத்தனை துயர்வரினும் போகின்ற போக்கில்
நிலவை ரசிப்பவன் ரசித்தபடி கடக்கின்றான்!
ஏதோ ஒரு கோளம் வானில் என்று
உணர்சியற்றுப் பார்த்தபடி இன்னொருவனும்
கடந்து போகின்றான்!

ஆயுளில் நம் பங்கை பிறந்த சிலநாளிலோ,
நான்கில் ஒன்றாகவோ, இரண்டாகவோ, 
மூன்றாகவோ இல்லையெனில்
முழுமையாகவோ விதித்து வைத்திருக்கலாம்!
இன்றைய நாம் மற்றவர் கண்முன்னே
நாளையே காணாமற் போகலாம்!

இனி நிலவினை ரசிப்பதும்
இல்லையெனில் வெறித்தபடி கடப்பதும்
உற்றவர் உணர்வுகளை மதிப்பதும்
இல்லை மிதிப்பதும்
நம் தீர்மானங்களில் மட்டுமே....

---கீர்த்தனா---

2 comments:

  1. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி தம்பி! :)

      Delete