Saturday 29 December 2012

செங்குருதியும் சுவைத்ததோடா...

கருவறைக் கோவிலில்
பூத்த புனிதமலர் ஒன்று...
புழுதியில் கசக்கி வீசி இன்று!

சின்னாபின்னமாக்கி...
இதழ்களைப் பிழிந்த சாற்றின்
செங்குருதியும் சுவைத்ததோடா...
இராட்சதக் காம வண்டுகளே!

கால்களில் உழக்கி நசுக்கிக்
கொன்று தொலைத்திட
நெஞ்சம் துடித்திட
கண்கள் செந்நீர் வடிக்கிறது!

மலரே நீ விதையாய் உறங்கு!
பூவே உன் புதைகுழி மடியில்
கயவரை ஒழிக்க - உனது
ஓராயிரம் கோடி அன்புச்சகோதரர்கள்
போர்க்கொடி தூக்கியாயிற்று!


அழகுமலரே பலகோடி இதயங்களின்
சிந்திய கண்ணீர்ப் பூக்களை - உனக்கு
அஞ்சலியாகச் செலுத்துகின்றேன்..
ஆன்மா சாந்தி அடையட்டும்...

---கீர்த்தனா---

Friday 28 December 2012

நிலைக்காத உறவு...

நீளும் இரவுகள்...
நிறைவேறாக் கனவுகள்...
நினைக்காத நெஞ்சத்துக்காய்...
நினைந்துருகும் நீள்நிலைகள்...
நீக்கமற நீ என்னுள்ளே,
அன்று சொன்னது நீ தானா?
நீக்கிவிடத் துடிப்பதுவும்,
இன்று உண்மையில் நீ தானா?
நிலைக்காத உறவும்...
நிலைமாறும் உலகும்...
நிராசைகளின் பிறப்பிடமாய்...
நிதர்சனத்தின் உறைவிடமாய்...!

---கீர்த்தனா---

Wednesday 26 December 2012

கரை உடைத்த கடுங்கோபம்!

கரையோரக் கண்மணிகள்...
கடவுளாய்த் தான் நினைந்து,
கண்ணோரம் கனவு நிறைத்து,
கடலன்னை மடி தவழ்ந்தார்!

கரை உடைத்த கடுங்கோபம்!
காவு கொண்ட கடுங்கோரம்!
கதறிய உறவுகளின்...நெஞ்சம்
கனத்த வலியின் ஓலம்!
காட்சிப்பதிவாய்க் கண்முன்னே...
கனவிலும் நினைவிலும் -
ஜீரணிக்க முடியாமல்...
கண்களை நனைத்தபடி...
கலங்கிய நெஞ்சத்துள் இன்னும்...!

---கீர்த்தனா---

இறை பாலனே...

ஒளிவீச்சாய்த் தொழுவத்தில்,
மிதந்தாய் பொன்னழகே...
வைக்கோற் போரினிலே...
பேரழகு மின்ன மின்ன...!

கண்களின் ஒளியினிலே
கோடி விண்மீன்கள்...
ஜொலித்தன உலகின்
இருளினை விரட்டிட...!

புன்னகைத்த பூவுதட்டில்...
புதைத்தாய் புண்ணிய பாலனே,
பாவம் பெருக்கிய மானிடர்,
பாவச் சுமைகளை...!

அன்புச் செல்வா! அதிரூப நாயகா!
அன்னை மரியாய் மடி பூத்த மலரே!
நள்ளிரவு காத்திருந்தேன் கண்மலர்த்தி,..
இறை பாலனே உன் வரவை நோக்கி...
இப்போதும் உன்னைச் சுமக்க வைக்க தான்
இவ்வையகம் முழுவதும் பெருகி வழியும்
பாவச்சுமைகளை....!

---கீர்த்தனா---

Monday 24 December 2012

இரட்டைக் கலாச்சாரம்...

இரட்டைக் கலாச்சாரம்...
இடர் படும் பெற்றோர்...
புலம் பெயர் வாசத்தில்
சுவாசம் முட்டி..!

பண்பாடு கலையாத
நம் எண்ணங்கள்,
புண்பாடு காணுமோ
எனத் தினம் எண்ணி...!

அந்நியக் கலாச்சாரம்
ஒட்டவில்லை நெஞ்சில்...
பெற்றவர் மனம் வருந்தி,
பிள்ளைகள் மனம் வருத்தி!

இரு வேறு சமூகத்தில்
ஊன்ற முடியாமல்...
குழந்தைகளின் போராட்டம்!
பண்பாட்டு விழுமியங்களை
ஆழமாய் நேசிக்கும்...
பெற்றவர்கள் போராட்டம்!
தினந்தோறும் முடிவில்லா
நிம்மதியற்ற விடியல்கள்...!

---கீர்த்தனா---

Saturday 22 December 2012

துணை...


பற்றுக் கொண்டு,
பற்றிக் கொண்ட துணை,
பண்பு கெட்டு நிற்கையிலே!
அற்றைய நாளின்
இனிய நினைவுகளில்...
இற்றைய சினத்தை அடக்கி...
சிரித்து வாழ்வதாய் நடிக்கும்,
காயம் பட்ட நேசநெஞ்சங்கள் !

---கீர்த்தனா---

Tuesday 18 December 2012

தனித்தவம்!

புலரும் பொழுதினில்
புலரா மனத்துடன் !
புதிர்களின் முடிச்சுடன்...
புன்னகைக்க மறந்து !

புதுவழிப் பாதையின்
புரிதல் அறியாமல் !
புதுப் புது அர்த்தங்களின்
புழுங்கலில் மனம் அவிந்து !
புதிய சொர்க்க வாசல் தேடி
புரையேறிய காயங்களுடன் !
புத்தொளியை உற்று நோக்கி
பளிங்குப் பாறையில் தனித்தவம்!

---கீர்த்தனா---

Monday 17 December 2012

அன்பை யாசகமாய் !


நெஞ்சம் நிரப்பிய நேசப்பூக்கள் !
வஞ்சம் இல்லாக் கொஞ்சும் அன்பு !
துஞ்சாமற் காதல் கொண்டு !
வாஞ்சையுடன் வழங்கிய நாட்கள் !

பஞ்சமும் வந்ததோ - பாச
நெஞ்சுக்குள்ளே இன்று !
கெஞ்சும் விழி ஓடைக்குள்...
மிஞ்சாமல் பெருகும் நீருடன்!
தஞ்சம் கேட்கும் உன்னிடம்...
விஞ்சும் அன்பை யாசகமாய் !
எஞ்சிய காயங்களின் ரணங்கள்...
மிஞ்சின ஊமைக் கேவலுடன்...!

---கீர்த்தனா---

பக்குவம்...



புல் நுனியில் பக்குவமாய்
அமரும் பனித்துளி!
முள்ளின் மேல் பயமின்றி
அமரும் ரோஜா!
இயற்கையின் பக்குவம்...
நம்மிடத்தில் இல்லையோ?

---கீர்த்தனா---

Tuesday 11 December 2012

மானிடக்காவலன்!

எட்டைய புரத்தில்...
கிட்டிய முத்தவன்!
கட்டியங் கூறியே

எட்டி உதைத்தான்...
புது ஜகம் படைக்க
சமூகத் தளைகளை!!!

பெண்ணுக்கும் ஒரு மனம்
உண்டெனக் கண்டு...
பொங்கி எழுந்த எம்
தோழன் அவன்!
கண்களில் ஈரமும்
நெஞ்சினில் வீரமும்
பெண்மைக்கு தந்திட்ட
வள்ளல் அவன்!

பாட்டினில் ஆடிய...
ரௌத்திரத் தாண்டவம்
நெஞ்சினில் இன்னும்
பெரு நெருப்பாய்...!

அக்கினிக் குஞ்சொன்று
கண்டான்...!
அக்கினிக் கவிஞனாய்
நின்றான்...!
அநீதிகள் எரித்தான்...
மானிடம் காக்க..
தீர்க்கம் நிறைந்த அனல்
தீப் பார்வையினாலே..!

நெஞ்சினுள் வாழ்ந்திடும்
அமர கவியாய்...என்றென்றும்
எம் ரௌத்திரக் காதலன்!
அருள் நிறை அன்புக் கவிஞன்!
மனம் நிறை மானிடக்காவலன்!

----கீர்த்தனா----

Friday 7 December 2012

குளிரும் நானும்...

விடிந்தும் விடியவில்லை
குளிரின் தீண்டலிலே...!

போர்வைக்குள் சிறைவாசம்
மிகவும் பிடிக்கிறதே...!
பசி உணர்வும் மறந்து...
தலையணைக்குள் முகம் புதைத்து
தூங்கும் சுகம்...இதம் இதம்..!
இறைவன் தந்த இனிய வரம்!

வெள்ளைப் பூமழை பொழிய...
சாளரம் ஊடறத்துக் காட்சிகள் விரிய...
மெல்லிருளின் சிறு அணைப்பில்..
சுடுபானக் கோப்பை தனை...
இதழ்களிலே பொருத்திக் கொண்டேன்!

சில்லிட்ட மயிர்க்கால்கள்
குத்திட்டு எழுந்து நிற்க...
குளிரின் தழுவல் தனை
காதல் செய்தேன் இதமாக...
கதகதப்புப் போர்வைக்குள்
முழுதாகப் புதைந்து கொண்டே!

---கீர்த்தனா---

விழிநீரே....

வலி தீர்க்கும் சக்தி
இல்லையெனின்...
எதற்காக உடைப்பெடுத்து

ஓடுகிறாய் ?

சத்தம் இல்லாமல் தான்
இருக்கின்றேன்...
பாசத்தின் பிரிவு
மனதைப் பிழியத்தான்
செய்கிறது...
ரணமாக வலிக்கத் தான்
செய்கிறது...

உன்னிடம் உதவி கேட்டேனா ?
எதற்காக விழி தெறிக்க
இந்த நீரோட்டம்??

---கீர்த்தனா---

Monday 3 December 2012

அழகியல் விதிகள்...















பூப்பூவாய் வெண்பனிப்பொழிவு!
பார்க்குமிடமெலாம் நீக்கமற நிறைந்து...
மென்துகள் குவியல் பூமகள் மடியில்!

புதைந்து, புரண்டு எழுந்திடும் ஆசை
கரைந்து மறையும் நொடிப்பொழுதினிலே...
கடும் குளிரின் மிரட்சியினாலே!

மேக மூட்டம் விலக்கி அங்கே...
துகள் மேற் சூரியக்கதிர் தழுவும் நேரம்...
இலட்சம் கோடி வைரப் பொடிகள்...
மின்னும் கண்களை நிறைத்த படியே!

கொட்டிய அழகினைக் கண்களால் விழுங்கி...
கோர்த்தேன் அழகிய ஆரம் தனையே!
ஆண்டவன் படைப்பின் அழகியல் விதிகள்...
மனதினை நிறைக்கும் இலவசச் சுகங்கள்!

---கீர்த்தனா---

Saturday 1 December 2012

நேசத்தின் அளவீடு

கம்பீரமானவளே !
எங்கே தான் தொலைந்தாய்?
உன்னைக் காணாமல்
மூழ்கடிக்கும் காரணிகள் தான் என்ன?
நேசத்தின் ஆற்றுக்குள்
மூழ்கித் தான் தொலைந்தனையோ?
எழுகிறாய் வீழ்கிறாய்
அடிக்கடி ஏன் தடுமாற்றம்?

ஒருநாளில் மகிழுதல்...
பலநாளில் துவளுதல்...
நிலையில்லாமல்...
நிறம் மாறும் மனம்...
மாயத்தின் தளையோ..,
பாசத்தின் முடிச்சுக்கள்?

வலிகளின் கொள்ளளவும்
அன்பின் கொள்ளளவும்
அளவிடும் கருவி ஒன்று
இக்கணத்தில் இங்கு வேண்டும்
வேசமில்லா என் நெஞ்சுதனை
அளவிட்டுக் காட்டிவிட

மாயப் பிறப்பறுக்கும்...
அந்நாளில் தோன்றும்
நிம்மதியில் ஓர் உறக்கம்...
அந்நாள் வரை யாவருமே
இரையாகித் தான் ஆகவேண்டும்
போராட்டத்தின் பசியடக்க...!

---கீர்த்தனா---

Friday 30 November 2012

கவியறியா என் தூரிகையும்…

கம்பன் வீட்டுக்
கட்டுத்தறியும்…
கவி பாடுமாம்!   


கவிக் குருவிக்
கூட்டினிலே
இணைந்ததினால்
தானோ...?

கவியறியா
என் தூரிகையும்…
கவி புனைய
முனைந்தது…!

தொடுவானம்
தூரமில்லை…என்று
தொட்டு விட
தோள் கொடுத்த
தோழமைக்கு
முதல் நன்றி...!

---கீர்த்தனா---

Tuesday 27 November 2012

வெளிச்சப்புள்ளிகளைக் காணவில்லை…

அல்லல் சூழ் இருளின்...
அடர் மேகக் கூட்டம்!
ஆசைகள் யாவுமே நிராசைகளாய்…
ஆவன செய்யப் படாமலே!
இருட்டினில் வெளிச்சப்புள்ளிகளை…
இகலோக எல்லைவரை காணவில்லை!

ஈவதற்கு மனம் கொண்ட- அன்பின்
ஈதற் கொடையாளி எங்கேயென…
உதடுகள் துடிக்க, உணர்வுகள் வெடிக்க…
ஊமைக்காயங்கள் கடும்வலி கொடுக்க…
எதிர்பார்க்கும் இரு ஈரவிழிகள்…
ஏக்கத்துடன் எங்கோ வெறித்தபடி…!

ஐக்கியமான அன்பின் ஆழப்பரிமாற்றம்…
ஒருகணத்தில் காற்றின் விசையையும் தாண்டி
ஓடிவரும்… காயங்களின் சுவடுகளை
ஒளடதம் தடவிப் பாசப்பூவால் ஒற்ற...!

---கீர்த்தனா---

அல்லல் = துன்பம்
ஈதல் = கொடுத்தல்
ஒளடதம் = மருந்து

Monday 26 November 2012

என்னவளே என்னுயிரே...

உன் மனக் கூட்டுக்குள்
வாழ்ந்திட விரும்பும்
உன்னவன் நானடி
என்னவளே!
என் சுவாசமே
உன் சுவாசமாய்...
என் வலி யாவும்
உன் வலியாய்...

சிரிப்பினில் இணைந்து
அழுகையில் கலந்து...
இன்பம் தந்து துன்பம் சுமந்து...
என்னுயிர் வாரிசைக்
கருவினில் சுமந்து...

கண்களின் வருடலில்
கருத்தினை நிறைத்து...
கருணை வார்த்தையில்
துயரினைக் களைந்து...
உன்னை நீயே
எனக்காய் இழந்தாய்...
இழப்பினில் கூட
இன்பம் கண்டாய்!

எழுத்தினில் தானா
உயிரும் மெய்யும்...
இரண்டறக்கலந்து
ஒன்றாய் இணையும்?
இரு மெய் ஒரு உயிர்...
இரு மனம் ஒரு மனம்...
ஒன்றாய் ஆனோம்
நானும் நீயும்!

என்னில் கலந்து எனக்காய் வாழும்...
உன்னைப் போற்றுதல்
அடிமைத்தனம் என்றால்...
தூற்றுவார் தூற்றட்டும்...
என்னவளே...என்னுயிரே...
மகிழ்வுடன் நெகிழ்வுடன்
உன் அன்புக்கு அடிமையாய் நான்!

---கீர்த்தனா---

பெருமையுடன் என்னுயிர்த்தோழன் கருத்தில் இருந்து கருவாய் இக்கவிதை...

Thursday 22 November 2012

மண்வாசனை


வானம் பொழியும்
நீர்க்கோடுகள்… பாய்ந்து வந்து
மண்மகளை முத்தமிடும்…
முதல் துளிகளை
ஆழ உள்ளிழுத்து
அவள் விடும் ஒரு மூச்சில்…
குப்பென எழுந்து
நாசியை நிறைக்கும்
இனிய மண்வாசனை!

மழைக்குளிப்பின் ஆனந்தத்தில்…
தழுவும் காற்றின் துணையுடன்…
நர்த்தனமாடும் பூக்களும் செடிகளும்!

பட்டுச் சிறகுகள் விரித்து…
நீர்முத்துக்களை
உதறிச் சிலிர்த்துக் களிக்கும்…
வண்ணவண்ணப் பறவைகளும்!

கால்களினால் நீர் துழாவி…
காகிதக் கப்பல் விட்டு…
சிரிப்பினிலே கலகலக்கும்…
சின்னஞ்சிறு குழந்தைகளும்!

நாடு விட்டு நாடு வந்தும்…
நாசியிலே மண் வாசனையும்…
நினைவுகளின் காட்சிகளும்…
நச்சென இன்றும்…

---கீர்த்தனா---

Tuesday 20 November 2012

வலியே வரமாய்....

பிறப்பிலும் அழுகை!
இறப்பிலும் அழுகை!
வாழ்க்கைப் பாதையின்
வழி எங்கும் அழுகை!

சிரிக்க மறந்த கணங்களை
நினைத்துப் பார்க்கவும்
மறந்து..சிந்தை மயங்கி!

சிறு நொடியேனும்
சிரித்து வாழாது...
அழுகையிலேயே
கரைந்து முடியும்
வாழ்க்கைப் பயணம்...
சிலருக்கு மட்டும்
சிறப்பான வரமாய்...!


---கீர்த்தனா---

Sunday 18 November 2012

மின்சாரப் பரிமாற்றம்!

நான்கு விழிகளின்…
மின்சாரப் பரிமாற்றம்!
பொங்கிப் பிரவகிக்கும்… 
நூறு கவிதைகள்!
நர்த்தனம் ஆடிடும்…
இதயத்தின் அதிர்வுகள்!

விரல்கள் மீட்டா…
அற்புத கானமாய்…
விரவிப் பரவிடும்…
வீணையின் நாதம்!

மாயம் செய்யும்…
அற்புத மனக்கலப்பின்…
பரவசக் களிப்பினில்…
புண்ணிய தேசம் நோக்கி…
சிறகடிக்கும் மனப்பறவை!

---கீர்த்தனா---

Saturday 17 November 2012

ஒருநாளின் விழிப்புணர்வு… நூறாண்டின் வாழ்வுக்கணக்கு!


இளம் தளிரை முடக்கிவிடும் 
இளம்பிள்ளை வாதம் அது!
ஒருநாளின் விழிப்புணர்வு…
நூறாண்டின் வாழ்வுக்கணக்கு!
சிறுதவறின் அறுவடையாய்
சிறகொடியும் இளம்விதைகள்!

இழப்பது எத்தனை ?
சுமப்பது எத்தனை ?
துள்ளித் திரியும் பிராயமதை…
பலிகொடுத்து ஏங்கி நிற்கும்!
பள்ளி செல்லும் ஆசைதனை…
பறிகொடுத்து பதறி நிற்கும்! 
 
இரக்கமுள்ளோர் அனுதாபம்…
இரக்கமற்றோர் ஏளனம்…
இணைந்த களத் தாக்குதலால்…
வலியின் பிடியில் பிஞ்சுமனம்!

உளம் துடிக்கும் வலியறிவீரோ?
உடல் துடிக்கும் வலியறிவீரோ?
சக்கரநாற்காலி இல்லா ஏழைப்பிஞ்சின்…
நிலமரையும் வலியும் அறிவீரோ?
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்…
கடும்வலி காணும் பாவம் என்ன?

அறிவியல் நிறையுலகில்…
அறியாமை நீங்கி இன்றே…
விழிப்புணர்வு மிகக்கொண்டு…
விடிவிளக்காய் நாமிருப்போம்…
சிறுசுடர்கள் ஒளிவீச்சுக்காய்…!
 
---கீர்த்தனா---

 

Wednesday 14 November 2012

கொஞ்சும் மழலைகள்....


குவலயம் மகிழும்…
குழந்தையின் சிரிப்பினில்!
குறைகள் யாவும்…
பனியாய் விலகும்!

குவித்த இதழால்…
சிரிக்கும் அழகில்…
சொர்க்க வாசல்…
கண்முன் திறக்கும்!

இதழ்க்கடை நீருடன்…
கன்னத்தில் ஒற்றும்…
ஒழுகும் மென்முத்தம்…
கோடி மலர்களை…
தலைமேற் கொட்டும்!

பாசப் பதிவாய்…
வெண் பஞ்சுத் தொடுகை!
பூக்களின் உதிர்வாய்…
மழலைக் கொஞ்சல்!

மெத்துடல் எம் மேல்…
சரிக்கும் நேரம்…
மொத்தமும் மறக்கும்
பரவசம் பிறக்கும்!

இன்பம் பொங்கும்…
ஒளடத அணைப்பில்
இடர்கள் யாவும்…
பொடிபட்டுப் போகும்!

---கீர்த்தனா---

ஒளடதம் = மருந்து

 

Monday 12 November 2012

வறுமையின் கொதிப்பு…

பட்டாசு செய்யும்
பட்டாம் பூச்சிக்கு…
பச்சரிசிச் சோறுமில்லை…
பட்சணங்கள் ஏதுமில்லை…
பட்டுப் பூஞ் சிரிப்புமில்லை…
புத்தாடைப் பொசிப்புமில்லை!

பாழும் வயிற்றுக்காய்…
பாடுபட்டு வேலை செய்யும்…
பச்சை மண்ணின் சோகம் தனை…
பண்பு கொண்டோர் யாரறிவார்? 
 
பரிதவித்து இரசாயனம் தொட்டு…
பற்றியெரியும் கைகளோடு…
பசித்திருக்கும் வயிறும் எரிய…
பட்டுக்கன்னதில் நீர்க்கோடுகள்
பதித்த அழியாத கோலங்கள்!

பதறுகிறது வேதனை சுடும் நெஞ்சம்!
பற்றியெரிகிறது உணர்வுத்தணல்கள்!
பாரதிகள் எங்கே சென்றீர்?
பிஞ்சு நெஞ்சம் காப்போம் வாரீர்!!

---கீர்த்தனா---

Saturday 10 November 2012

இணைவுப்பந்தம்...

சொர்க்கத்திலே திருமணங்கள் 
நிச்சயம்!
தர்க்கத்திலே இருமனங்கள் 
கலைந்திடும்!
பொருந்தாத அலைவரிசை…
வருந்த வைக்கும் வாழ்வுதனை!
காதலிக்கும் போது இன்பம்…
கைபிடிக்கும் போது இல்லை!

மணம் பரப்பும் வாழ்க்கைக்கு…
மனதை நுகரும் திறன்வேண்டும்!
உணர்தலும் பகிர்தலும்…
இயைதலும் இழைதலும்…
வேசம் இல்லா பாசமும்…
நேசம் உள்ள நெஞ்சமும்…
இதமாக இணைந்தாலே…
இணைவுப்பந்தம் நிலைத்திடும்!
இன்பம் அங்கே கொழித்திடும்!

---கீர்த்தனா---

வண்ண நிலா...

சுட்டும் இருவிழிக்குள்
கருந் திராட்சைப்
பழங்கள் இரண்டு...
அங்கும் இங்கும்
உருண்டோடி
விழி விரித்துக்
கதை பேச...

செப்பு வாயிதழ்கள்
ரோஜாமொட்டாய்
குவித்துச் சுழித்து...
நெஞ்சப்பூவை
அள்ளிச் செல்ல...
 
கால் முளைத்த
சிறு பூவின்...
கன்னக்குழிச் சிரிப்பு
மூவுலகமும்
மறக்கச் செய்ய...
வைத்த கண் வாங்காமல்
மெய் மறந்த ரசனையுடனே
நான்...!

---கீர்த்தனா---

Wednesday 7 November 2012

பாலைவனத்தில் பரிதவிப்பு....

பரந்த பாலைவனத்தில்…
கால்கள் சுடப் போகின்றேன்
தனிப்பயணம்!

இலக்கின்றிச் செல்லும்…
முடிவில்லாப்...
பெரும் பயணம்!

சூட்டின் கொடும் வலியில்…
கண்களில் நீர் பெருக…
அருந்த நீரின்றி
வாயும் அதைப் பருக…
மனதின் கடும் காயங்கள்
கொடும் சூட்டிலும் ஆறாமல்!

சுட்டு வெந்த பாதங்கள்…
சுடு மணலில் வீழ்ந்து மடியுமுன்…
மலர் தூவிக் கைகளில் ஏந்த…
அன்புள்ளம் பாய்ந்து வருமோ?

---கீர்த்தனா---

Tuesday 6 November 2012

கவிகளுக்கு எங்கே இறப்பு…

காற்றுக்கெங்கே வேலி…
கனவுக்கெங்கே எல்லை…
காதலுக்கெங்கே அழிவு… 

கதிரவனுக்கெங்கே இறப்பு…

கருவறைக்குளெங்கே பொய்மை…
கல்லுக்குளெங்கே மென்மை…
பண்புக்கெங்கே சிறுமை…
அன்புக்கெங்கே அடைக்கும் தாழ்…

நட்புக்குள் ஏது பிரிவு…
நட்புக்கு ஏது முடிவு…
கருவாக என்னுள் கலந்து…
உயிராய் உறைந்த உன்னால்…
பிறக்கும் கவிகளுக்கு எங்கே இறப்பு…

---கீர்த்தனா---

Sunday 4 November 2012

விழி மூடிய கனவிலும்...

தேம்பியபடி
உறங்கினேன்...
மனம் களைத்த

குழந்தையாய்...
வேதனை சூழ்ந்த
மனநிலையில்...!

விழி மூடிய
கனவிலும்
உட்புகுந்தாய்...!
அன்புக்கரம் நீட்டி...
சுண்டினாய்...

விரல்களால்
விழிநீர்த் துளிகளை...!

 
கலங்காதே அன்பே
எதற்குமென
செல்லமாய்க் குட்டு
வைத்தாய்..
உச்சந்தலை தனிலே...
சிரித்தபடி...!

கனவினிலும் ஆறுதல்
தரும் உன் அன்பில்
நெக்குருகிக் கரைந்தேன்....!
பாதுகாப்பின்
மலர்ப்படுக்கையில்...
மீண்டும் சுகமான உறக்கம்...!
இதழ்க்கடையில்
பூத்த சிரிப்புடன்...!

---கீர்த்தனா---

மாயை...அதுவே மெய்!

உருவம் கொண்ட
மெய்யும் மெய் !
அருவம் கொண்ட 

உயிரும் மெய்!

உணர்வு கொண்ட
மனிதன் மெய்!
உள்ளம் கொண்ட
காதல் மெய்!

கருணை உள்ள
கடவுள் மெய்!
கண்கள் உணர்ந்த
காட்சிகள் மெய்!

வாழ்வில் காணும்
இன்பங்கள் மெய்!
மனதை உழற்றும்
துன்பங்கள் மெய்!

இல்லை இல்லை
அத்தனையும் பொய்!
அனைத்தும் மாயை
அதுவே மெய்!

---கீர்த்தனா---

Sunday 28 October 2012

இனிய நிலாக்காலம்...


பறவைகளின் கொஞ்சலுடன்...
அதிகாலைப் பனி நேரம்...
வீட்டுச்சிறு தோட்டம் தனில்

நான் உலவிய காலம்...!
வண்ண மலர்களுடன்
கதைபேசி...புத்தம் புதுக்
காய்கறிகள் பறித்து...
இன்புற்றிருந்த
இனிய நிலாக்காலம்...
இன்றே எனக்கு...
மீண்டும் வேண்டும்...!

பசுவின் மடி தொட்டு...
அன்னை கறந்த பாலில்...
அருமையாய்ச் சுடுபானம்...
அருந்திச் சுவைத்திருந்த
என் வீட்டுச் சமையற்கட்டு...
இந்த நிமிடம்...
இங்கே வேண்டும்...!

ஊற வைத்த பழஞ்சோறு...
சுட்ட கருவாடு தொட்டு...
சுவைத்துக் களித்திருந்த...
என் வீட்டுத் திண்ணை...
இக்கணத்தில்...
வேண்டும் வேண்டும்...!

வட்டமிட்டு நாமிருந்து...
கூடிக் கூழ் குடித்து...
பேசிக் களித்திருந்த...
என் வீட்டு நிலாமுற்றம்...
இப்போதே...
வேண்டும் வேண்டும்...!

கொட்டும் பனிமழையில்...
எல்லாமும் தொலைத்து விட்டு...
விட்டம் பார்த்திங்கே...
விழிகள் வெறித்தபடி...
இழந்தவையின் பெருமை எண்ணி...
மருகும் நெஞ்சம்...
கெஞ்சும் ஏக்கத்துடன்...
புலம் பெயர் மண்ணிலே...!

---கீர்த்தனா---

Friday 26 October 2012

இத்தனை விந்தைகளா?



நேர் கொண்ட கண்களின்
கூர்ப்பார்வை தன்னிலே...
இழந்தேன் என் மனதை
முழுதாய் உன்னிடம் நான்...!

சிறகடிக்கும் நெஞ்சினுள்ளே...
சிருங்கார லகரி ராகம்
இனிதாக மனம் மயக்க...
வான் வெளியில் என் பயணம்...!

ஒற்றைப் பார்வை வீச்சினுள்
இத்தனை விந்தைகளா?
பார்த்து விட்டு நீ சென்றாய்...
திருட்டுக் கொடுத்து விட்டு
நான் நின்றேன்...!

---கீர்த்தனா---

Thursday 25 October 2012

தாய்மை உன்னிடத்தில்...

பெண்மை கொண்ட
வரந்தன்னை பெற்றிடாத
வந்தியை…!


உச்சநிலை தாய்மை
தனை உணர்ந்திடாத
உலர் நிலை…!

கற்றவரும் மற்றவரும்
புரிந்து கொள்ளாக்
கொடும் நிலை…!
சமூகத்தின் விஷநாக்கு
கொத்திக் குதறும்
கடும் நிலை…!

தாயுமானவர்க் கடவுளா நீ
இத்தனை கொடுமை செய்தாய்?
பெண்மையே வருந்தாதே…!
தாய்மையை இழக்காதே…!

கடவுளும் வெட்கித்
தலை குனியட்டும்...
உன் செயல் கண்டு…!
சின்னஞ்சிறு பூக்களிடம்
அவன் பறித்த தாய்மையை…
இன்றே நீ கொடுத்து விடு...!
மனம் நிறைந்து....
சிறு பூவொன்றின் தாயாகு...!


---கீர்த்தனா---


Wednesday 24 October 2012

ஐப்பசி 24













பேச்சினில் சமாதானம்
மூச்சினில் காணவில்லை…!
காட்டு விலங்குகளாய்

எப்போதும் வீண்சண்டை…!

வீட்டினில் குழப்பம்
நாட்டினில் குழப்பம்…
விட்டுக் கொடுக்கும்
எண்ணங்கள்…
வீம்பினில் இங்கு
வருவதில்லை…!
அகங்காரம் தலைதூக்கி….
அறிவுக்கண் மறைத்து…
அமைதியை இங்கு
கொன்று தின்றிடும்…!

தாக்கி இன்புறும்
செயலினை விடுத்து…
நோக்கிச் செல்வோம்
சமாதான வழி தனில்…
வெண்புறா மட்டுமா
அமைதித் தூதனுப்பும்…
மானிடப்புறாக்கள்
நாமும் அனுப்புவோம்….!
உலக சமாதான
தினத்தில் இன்று
உறுதி கொள்வோம்…
கொள்கை வெல்வோம்…!

---கீர்த்தனா---

Tuesday 23 October 2012

விதைப்பின் பயனில்....



 
 
 
 
 
 
 
 
 
கவிதை சொல்லும்
என் விழிகளுக்குள்...
கனவினை விதைத்த
உன் விழிகள்...!
கவிமலர்ப் பூக்கள்
பூத்துக் குலுங்க...
விதைப்பின் பயனில்
இன்பம் பொங்க...!

---கீர்த்தனா---

Saturday 20 October 2012

என்னுயிர் பாரதி...!


நெஞ்சினுள் வாழும்
என்னுயிர் பாரதி...!
சமூகச் சாக்கடைகளை
மிதித்தபடி நடக்கின்றேன்
மாற்றும் திராணியற்று...!

மந்தைகளாய் வாழும்
மாந்தர் மத்தியில்...
ஒளிந்திருக்கும் மனிதம்
எங்கே தேடுவேன்...
நல்லவர் கெட்டவர்
பிரித்தறியத்
தெரியவில்லை...!
சுயநல ஜகத்தின் முன்
தலை குனிந்து...
தோற்றுப்போய்...!

ஏறு போல் நடை
தேறவில்லை இங்கு...!
உன் பக்தையாய் வாழும்
தகுதி இழந்து...
கூனிக்குறுகி உணர்வு இறந்து
மனக்கூட்டுக்குள் பதுங்கி
வெறும் பிணமாய்...!

---கீர்த்தனா---

அன்புத் தோழமைகள்...















வலிகள் சூழ்ந்த
இருளின் களைப்பினிலே...
முகநூல் நண்பர்கள்
முகம் காணாது...
மூன்று நாள்
விடுப்பெடுத்தேன்...!

திருவிழாக் கூட்டத்திலே...
தனித்து விட்ட
குழந்தையைப் போல்...
திரு திரு என்றே விழித்து...
விழிநீர் உடைப்பெடுத்து...
தனிமையின் கொடுமையில்
மிதிபட்டு கலங்கினேன்...!

அன்புத் தோழமைகள்
உள்ளச் சிறைக்குள்
சரண் புகும் கணத்துக்காய்...
யுகங்களாய்க் கடக்கும்
நொடிகளை எண்ணியபடி...!

--- கீர்த்தனா---

கவிக்கருவாய்...!













உணர்வுகள் உறங்கட்டும்..
விலகல்கள் தொடரட்டும்..
நீ மட்டும் விலக முடியா
கவிக்கருவாய்...!

தொடரட்டும் உன் பங்கு...
என் படைப்பின் பணியில்
என்றென்றும்...
சாகாவரத்துடன்...!


---கீர்த்தனா---

Monday 15 October 2012

பொட்டிழந்த பொன்மலர்கள்...

முகர மறுத்த வெண்
மலர்களின் வாசம்...
மூடிய சுவர்களுக்குள்...

உணர்வுகள் கருகி
மெழுகாய் உருகி...
பொட்டிழந்த பொன்மலர்கள்
பூவிழந்த பூங்கொடிகள்...!

சமூகத்துப் பார்வைக்
கண்காணிப்புச் சிறையில்...
விலங்குகள் பூட்டிய
கைகளுடன்...
விலங்கு உடைத்து
வெளியேறும் துணிவின்றி...

உணர்வுகள் புதைத்து
கடைசி ஆசையும் சொல்லும்
உரிமையும் இன்றி...
தூக்கு தண்டனைக்
கைதிகளாய்...
மனிதம் செத்த மனிதருக்காய்
தம் வாழ்வை இறப்பித்து...!

---கீர்த்தனா---

Friday 12 October 2012

சூழும் துன்பம் முழுதாய் மறந்து...

 
இரவின் தனிமையில்...           
அமைதியின் மடியில்... 
இதமாய்க் கயிற்றுக்
கட்டிலில் சாய்ந்தே...
மெல்லிசைப்பாடல்
இசையில் நனைந்து...
உருகும் இதயம்
பரவசம் கொள்ள...
முகிலினுள் தவழும்
நிலவினை ரசித்து...
நட்சத்திரக் கூட்டத்தை
விழிகளால்  விழுங்கி...
சூழும் துன்பம்
முழுதாய் மறந்து... 
வாழ்க்கையை சுகிக்கும்
இரசிகை ஆனேன்...!

 
---கீர்த்தனா---

 

Thursday 11 October 2012

உன்னை அன்றி யார் அறிவார்...

ஆழக்கடலாய்..உள்மனது...
உன்னுள்ளே என்னவென்று
உன்னை அன்றி யார் அறிவார்...!
மனமே அமைதி கொள்...!

உனக்கு நீயே ஆறுதல்
சொல்..எப்போதுமே...!
அமைதியின் மடியில்....
பிஞ்சுக் குழந்தையாய்
நான் தூங்க வேண்டும்...!
சொல்கின்றேன் மீண்டும்...
மனமே அமைதி கொள்...!

---கீர்த்தனா---

மென்சிறகுகளுக்குள்….


உன்னிடம் மட்டுமே…
குழந்தையாய்
அடம் பிடிப்பு…!
புரிந்து கொள் 
உனதன்புக்
குழந்தையை…!

மென்சிறகுகளுக்குள்
பத்திரமாய் எனைக்காத்து…
அன்பை ஈந்து…
தோள் கொடுத்து
அரவணைத்து…
தவறு கண்டித்து,
மன்னித்து…
தாயுமானவராய்...!

உன்னன்பின் உயிர்ப்பில்…
என்னுயிர் உயிர்ப்பித்து…
இயக்க வேண்டும்
எனை நீயும்…!
உன் பின்னே தொடரட்டும்…
அழகான என் பயணம்…
இறக்கைகளின்
பாதுகாப்புடனே...




---கீர்த்தனா---


நெஞ்சினுள் என்றும் பத்திரமாய்...


முட்களும் பூக்களாகும்…

கூடப் பிறக்கவில்லை…
கூடித் திரியவில்லை…
எத்தனை அன்பு…
உள்ளம் எல்லாம்
நிறைத்து…!

எங்கிருந்து வந்தார்கள்
அன்பு தந்து திணறடிக்க…!
ஒற்றைச் சொல்
பரிவு வார்த்தை…
ஒற்றிச் செல்லும்
இறகால் மனதை….

மனதில் தோன்றும்
உணர்வுகளுக்கு…
வார்த்தைகள் ஒன்றும்
படைக்கவுமில்லை…!
வார்த்தை தேடி
வாய் வராமல்…
நெகிழ்வு நெகிழ்வு
நெஞ்சார்ந்த நெகிழ்வு…!

அதற்கும் ஒரு பெயர்
உணர்வுப் பலவீனம்…!
இத்தனை மலர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்து…
அன்பை அள்ளி
வாசம் தெளித்தால்…
பலவீனமும் பலமாகும்…
முட்களும் பூக்களாகும்….!

---கீர்த்தனா---

Wednesday 10 October 2012

பறக்கும் நெஞ்சம்...!

நீரின் அலைகள்
விரியும் அழகில்…
மீன்கள் சுழித்து
நீந்தும் அழகில்…
முகை வெடித்துச்சிரிக்கும் 
பூவின் அழகில்…
பனித்துளி சிலிர்க்கும்
புல்நுனி அழகில்…
வானம் கொட்டும்
மழைத்துளி அழகில்…
மழலைகள் விரிக்கும்
பூஞ்சிரிப்பழகில்...
இலவம் பஞ்சாய்ப்
பறக்கும் நெஞ்சம்...!

 ---கீர்த்தனா----

 

 

 

நிழல்கள்

 
 
 
எங்கிருந்தோ அழைத்தது
ஓர் உறவு ...!
முகவரி தொலைத்தது
ஓர் மனது ...!
நிழல்கள் நிஜமாகும்
எனும் வெட்டி
நம்பிக்கையுடன்...
நிஜங்களின் உள்நிலை
அறியாத் தவிப்புடன்...!
தொடரும் தேடல்களும்
சஞ்சலங்களும்.....!
---கீர்த்தனா----

உயிர் நட்பு...


Tuesday 9 October 2012

நீங்கும் காலம்….!

பழையவை கழிதல்
பழமொழி இங்கே….
நட்பினில் மட்டும்…
வேண்டவே வேண்டாம்…!
புதியன புகுதல்
ஒரு வகை இனிமை…
பழையன கழிதல்
மிக மிகக் கொடுமை...
பூக்களாய் மனதில்
தோன்றிய நட்பு….
வாட்களாய் மனதினை
அறுத்திட வேண்டாம்…!

திகட்டக் கொடுக்கும்
அன்பும் ஒரு நாள்….
நமக்குரியோரைத்
தூர நிறுத்தும்…!
கற்பது புதிய பாடங்கள்
எனினும்… முகவரி தொலையும்
வலியுடன் விரைவில்…
முகவுலகம் விட்டு
நீங்கும் காலம்….!

நெருஞ்சி முட்கள்
நெஞ்சினுள் தைக்கும்…
வலிகளின் மனது….!
அலட்சியம் காட்டும் உயிர் நட்பு
மலர் போல் மனதை….
அணுவாய்க் கொல்லும்….!
துன்பம் இங்கே தங்கட்டும்…!
இன்பம் அங்கே பொங்கட்டும்…!

---கீர்த்தனா---


 

Saturday 6 October 2012

நீ.................

கண்கள் மூடும்
கனவிலும் நீ...
மெய்மறந்தபடியே
நினைவிலும் நீ...
என்னுள்ளே
பெரும் பிரளயமாய் நீ...
பெரும் பிரபஞ்சமாய் நீ...

உன் வியாபிப்பினால்...
தொலைந்து தான்
போனேன்...நான்...
உயிர் மட்டுமல்ல...
உணவை மறுக்கும்...
உடலும்...சிறுக சிறுக
உணர்வுக்கடலில் கரைகிறது...

----கீர்த்தனா----