Tuesday 1 July 2014

மழையின் ஸ்வரம்

குளிர்கூதல் உறவாடும்
அழகான மழைநேரம்!
அதிகாலைச் சிறுகுருவி
நனைந்து பாடும் சுகராகம்!

சடசடக்கும் மழைத்துளிகள்
சலசலத்து சுழித்தோட
தலைதூக்கும் பசும்புற்கள்
அலைச்சுழிப்பில் சுழன்றாட
குளித்துவிட்ட மரக்கூந்தல்
குளிர்ச்சியுடன் அசைந்தாட

காரிருளின் திரட்சியிலே
அச்சுதனின் முகம் தோன்ற
அழகனவன் செவ்வாய்ச் சிரிப்பு
சிந்தையிலே ஸ்வரம் பாட
குழலிசையின் நாதமெங்கொ
கற்பனையில் கரைந்து வர

தோகைமயில் ஆடலுடன்
செங்கார்த்திகைப் பூக்களும்
தேங்கிய குட்டைகளும்
அதில் மிதந்த கப்பல்களும்
புலம்பெயர்ந்து வந்திங்கே
சிலகணங்கள் நினைவிலாட
மழையின் ஸ்வரம்
மனதினிலே சுகம்...

---கீர்த்தனா--- (கீதா ரவி)

No comments:

Post a Comment